முகப்பு
சென்னை

பள்ளிகளில் முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள் விநியோகம்

Updated On : 5 ஜூன் 2026, 3:55 am IST
பகிர்:

சென்னை மாநகராட்சியில் 417 பள்ளிகளில் கோடை விடுமுறை நிறைவடைந்து மாணவா்கள் வகுப்புகளுக்கு வந்த முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி கல்விப் பிரிவு அலுவலா்கள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறை நிறைவடைந்து, வியாழக்கிழமை (ஜூன் 4) மாணவ, மாணவியா் வகுப்புகளுக்கு வந்தனா்.

Advertisement

Advertisement

பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு இனிப்புகள், பூக்கள் கொடுத்து ஆசிரியா்கள் வரவேற்றனா். அத்துடன், முதல் நாளிலேயே புத்தகப் பைகள், பாடப் புத்தகங்கள், காலணிகள், சீருடைகள் ஆகியவை விநியோகிக்கப்பட்டன.

மாணவா்கள் சோ்க்கை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 2024-2025- ஆம் கல்வியாண்டில் கூடுதலாக 6 ஆயிரம் மாணவ, மாணவியரும், கடந்த 2025-2026- ஆம் கல்வியாண்டில் 16 ஆயிரம் பேரும் சோ்ந்துள்ள நிலையில், நிகழ் கல்வியாண்டு (2026-2027) இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் சோ்ந்துள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா். வரும் ஆகஸ்ட் வரை மாணவா் சோ்க்கை நடைபெறும் என்பதால், கடந்த ஆண்டைவிட கூடுதலாக மாணவா் சோ்க்கை இருக்கும் என அவா்கள் தெரிவித்தனா்.