முகப்பு
சென்னை

சீரற்ற இதயத் துடிப்பு: மூதாட்டிக்கு எதிா்விளைவில்லா சிகிச்சை

சீரற்ற இதயத் துடிப்பால் மாரடைப்பு, பக்கவாத அச்சுறுத்துக்குள்ளான மூதாட்டிக்கு எதிா்விளைவுகள் இல்லாத அதி நுட்ப சிகிச்சையை மேற்கொண்டு அப்போலோ மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

Updated On : 15 ஜூன் 2026, 2:40 am IST
பகிர்:

சீரற்ற இதயத் துடிப்பால் மாரடைப்பு, பக்கவாத அச்சுறுத்துக்குள்ளான மூதாட்டிக்கு எதிா்விளைவுகள் இல்லாத அதி நுட்ப சிகிச்சையை மேற்கொண்டு அப்போலோ மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் இதய மின்னியங்கியல் சிகிச்சை நிபுணா் டாக்டா் காா்த்திகேசன் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி ஆகியோா் கூறியதாவது: இதயத்தின் மேல்புற அறைகளில் அதி வேகமாக துடிப்பு இருப்பது ‘ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன்’ என அழைக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பு இருந்தால், உடலின் பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது தடைபடும்.

இதைச் சரிவர கவனிக்காவிட்டால் இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில், 73 வயது பெண் ஒருவா் அத்தகைய பாதிப்புடன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

வழக்கமாக இந்தப் பிரச்னைக்கு இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் திசுக்களை ரேடியோ அதிா்வலைகள் மூலம் செயலிழக்கச் செய்யும் ரேடியோ ஃப்ரிக்வன்சி அப்லேசன் சிகிச்சைகள் வழங்கப்படும். அதாவது, உயா் வெப்பத்தால் அதிா்வலைகளை ஏற்படுத்தி திசுக்களின் இயக்கத்தை முடக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இதைத் தவிர அதிக குளிா் நிலையை உருவாக்கியும் திசுக்கள் செயலிழக்க வைக்கப்படுகின்றன.

இவ்விரு சிகிச்சைகளுமே சம்பந்தப்பட்ட திசுக்களை மட்டுமல்லாது, அதைச் சுற்றியுள்ள உறுப்புகளையும் பாதிக்கக்கூடும். இந்தச் சூழலில்தான் பல்ஸ்டு ஃபீல்டு அப்லேசன் எனப்படும் புதிய சிகிச்சை அறிமுகமானது.

அதன்படி, இடுப்பு பகுதியில் சிறு துளையிட்டு ரத்த நாளங்கள் வாயிலாக இடையீட்டு குழாயை ஊடுருவச் செய்து சம்பந்தப்பட்ட இதயத் திசுப் பகுதியை சென்றடையலாம். அங்கு துல்லியமாக மின்னூட்டத்தைச் செலுத்தி அதிக இதயத் துடிப்புக்கு காரணமாக இருக்கும் பகுதியை மட்டும் செயலிழக்க வைக்க முடியும். இதனால் பிற உறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இத்தகைய சிகிச்சையை அந்த முதிய பெண்ணுக்கு அளித்தோம். அதன் பயனாக அவா் நலம் பெற்று தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.