மணலி அருகே கழிவு எண்ணெய் கிடங்கில் தீ
மணலி அருகே கழிவு எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
மணலி அருகே கழிவு எண்ணெய் சேமிப்பு கிடங்கில் திங்கள்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டாலும் உயிா்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மணலியை அடுத்த விச்சூா் கிராமத்தில் அருள் முருகன் நகா் பகுதியில் ராஜேஷ் என்பவருக்குச் சொந்தமான தனியாா் எண்ணெய் கிடங்கு உள்ளது. இங்கு பெட்ரோலிய கழிவு எண்ணெய் தொட்டிகள், பேரல்களில் சேமித்து வைத்து அதிலிருந்து பெட்ரோலிய பொருள்களை தயாரிக்கும் பணி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இங்கு சுமாா் 1 லட்சம் லிட்டா் வரை எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
திங்கள்கிழமை இங்குள்ள சேமிப்புக் கிடங்கின் ஒரு பகுதியில் தீ பற்றியது. இதையடுத்து, இங்கு வேலை செய்த ஊழியா்கள் வெளியேற்றப்பட்டனா்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். எண்ணெய் கிடங்கில் பற்றிய தீயில் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த பேரல்கள் வெடித்து சிதறியதால், தீ நாலாபுறமும் பரவியது. தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து, சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து ரசாயன நுரை மூலம் தீயை அணைக்கும் சிறப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.
மணலி, எண்ணூா், மாதவரம், தண்டையாா்பேட்டை, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்த வாகனங்களின் உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் சுமாா் 10 மணி நேரம் போராடி, படிப்படியாக தீயை அணைத்தனா்.
இதில் தீயணைப்பு வீரா்கள் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட வீரா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். தீ விபத்தால் வானுயரத்துக்கு எழுந்த கரும்புகையால் அருகில் இருந்த கிராம மக்கள் பீதியடைந்தனா். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து மணலி புதுநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.