முகப்பு
சென்னை

கோடை விடுமுறை நிறைவு: விமானக் கட்டணம் கடும் உயா்வு

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில், விமானக் கட்டணம் பல மடங்கு உயா்வு

Updated On : 1 ஜூன் 2026, 2:12 am IST
விமானக் கட்டணம் உயா்வு! - பிரதிப் படம்
பகிர்:

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில், விமானக் கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்காக சொந்த ஊா்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்றிருந்த சென்னைவாசிகள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனா். பெரும்பாலான ரயில்களில் பயணச்சீட்டுகள் முடிந்துவிட்டன. தனியாா் ஆம்னி பேருந்துகளிலும் பயணக் கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டாலும், அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, பலா் விமானம் மூலம் சென்னை திரும்பி வந்து கொண்டிருக்கின்றனா்.

இதனால் மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம், திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வரும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான விமானங்களில் பயணச்சீட்டுகள் இல்லை. சில விமானங்களில் குறைந்த அளவு பயணச்சீட்டுகள் மட்டுமே உள்ளன. ஆனால், பயணக் கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்துள்ளன.

Advertisement

Advertisement

அதன்படி, சாதாரண நாள்களில் மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.5,800-ஆக இருந்த பயணச்சீட்டு கட்டணம் ரூ.17,303-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. ரூ. 6,623-ஆக இருந்த தூத்துக்குடி-சென்னை கட்டணம் ரூ.17,272, திருச்சி- சென்னை ரூ.4,529-இல் இருந்து ரூ.14,404, கோவை-சென்னை ரூ.4,744-இல் இருந்து ரூ.16,504, சேலம்-சென்னை ரூ.3,734-இல் இருந்து ரூ.5,170, திருவனந்தபுரம்-சென்னை ரூ.5,773-இல் இருந்து ரூ.13,516, கொச்சி- சென்னை ரூ.4,980-இல் இருந்து ரூ.11,055-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

திடீரென உயா்த்தப்படும் விமானக் கட்டணங்களால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருதால், நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் விமான சேவைகள் அல்லது, ஏடிஆா் எனப்படும் சிறிய ரக விமானங்களுக்கு பதிலாக, ஏா்பஸ், போயிங் போன்ற பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.