FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

8 வழிச்சாலை திட்டம்: கருப்புக் கொடி காட்டி விவசாயிகள் எதிர்ப்பு

சென்னை சேலம் 8 வழிச் சாலை பசுமைத் திட்டத்துக்கென கையகப்படுத்தப்படவுள்ள இடத்தில் கருப்புக் கொடி காட்டி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Updated On : 27 ஜூன் 2018, 4:17 am IST
பகிர்:

சென்னை சேலம் 8 வழிச் சாலை பசுமைத் திட்டத்துக்கென கையகப்படுத்தப்படவுள்ள இடத்தில் கருப்புக் கொடி காட்டி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை-சேலம் 8 வழிச்சாலை பசுமை திட்டத்துக்கு சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைத் தொடர்ந்து காஞ்சிபுரத்திலும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இத்திட்டத்தின் 277 கி.மீ. தொலைவில் சுமார் 59 கி.மீ. தொலைவு சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிறது. 
தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் இச்சாலை தொடங்குகிறது. அங்கிருந்து, படப்பை, குருவன்மேடு, பாலூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, அனுமந்தண்டலம், இளநகர், பெருநகர் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் இத்திட்ட சாலை செல்கிறது. காஞ்சிபுரத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான முதல் கட்ட பணிகள் வருவாய் அதிகாரிகள் தலைமையில் தொடங்கியுள்ளது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம் பகுதிகளில் நிலம் அளவிடப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
அதன்படி, சுமார் 1,300 ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, உத்தரமேரூர் வட்ட பகுதிகளான மணல்மேடு, ஒழுகரை, வெங்கூர், அனுமந்த தண்டலம், மலையம்குளம், சாத்தானஞ்சேரி உள்ளிட்ட கிராம பகுதி வீடுகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 
அதுபோல், மணல்மேடு பகுதியில் விவசாயிகள் தங்களது நிலத்தில் கருப்புக் கொடி நட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, வரும் ஜூலை 6-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. 
இதுகுறித்து மணல்மேடு, ஒழுகரை, சேத்தனஞ்சேரி உள்ளிட்ட கிராமத்தினர் கூறியதாவது: விவசாயத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலும் எங்களுக்கு தெரியாது. 
தலைமுறை தலைமுறையாய் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். பாலாற்றங்கரையையொட்டி, குறுநிலப் பகுதிகளை வைத்து 3 போகம் வரை விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில், 8 வழிச் சாலை திட்டத்தை நாங்கள் கேட்கவில்லை. 
இதனால், எங்களுக்கு எவ்வித பயனும் இல்லை. அத்துடன், நன்செய், புன்செய் நிலங்கள் பல ஏக்கர் அழிக்கப்படவுள்ளன. இதற்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் ஈடாகாது. 
பண்படுத்திய நிலத்தை கொடுத்துவிட்டு, வேறு எங்கும் செல்லமுடியாது. மாவட்ட நிர்வாகம் எங்களிடம் கட்டாயம் கருத்து கேட்க வேண்டும். மேலும், விவசாயம், விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் நல்ல முடிவை அரசு எடுக்கவேண்டும். இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments