செல்லிடப்பேசி கோபுரத்தில் சிக்கி இறந்த குரங்கு
செங்கல்பட்டு ராஜாஜி தெருவில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் சிக்கி அமர்ந்த நிலையில் இறந்த குரங்கின் உடல் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
செங்கல்பட்டு ராஜாஜி தெருவில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் சிக்கி அமர்ந்த நிலையில் இறந்த குரங்கின் உடல் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையையொட்டி அமைந்துள்ள ராஜாஜி தெருவில் துணிக் கடைகள், நகைக் கடைகள், பாத்திரக் கடைகள், மளிகைக் கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். மிகவும் நெரிசலான ராஜாஜி தெருவில் உள்ள அரிசிக்கடை சந்திற்கு எதிரே உள்ள கட்டடத்தின் மேல்தளத்தில் ஏர்செல் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட செல்லிடப்பேசி கோபுரம் உள்ளது. அந்த நிறுவனம் மூடப்பட்டதால் அந்த கோபுரம் பராமரிப்பு இல்லாத நிலையில் இருக்கிறது. இந்தப் பகுதியில் குரங்குகளின் கூட்டம் அட்டகாசம் செய்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு குரங்கு இந்த செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறியபோது அதில் சிக்கி இறந்து விட்டது. யாரும் கவனிக்காத நிலையில் கடந்த சில நாள்களாக துர்நாற்றம் வீசியபடி உள்ளது. கோபுரத்தில் சிக்கி இறந்த அந்தக் குரங்கு கருகிய நிலையில் உடல் பருத்து தலை தொங்கியபடி காணப்படுகிறது. குரங்கின் உடலில் இருந்து துர்நாற்றத்துடன் தண்ணீர் கீழே விழுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
செல்லிடப்பேசி கோபுரம் அமைந்துள்ள கட்டடத்தின் உரிமையாளரிடம் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. தீயணைப்புத் துறைக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இறந்த குரங்கின் உடலை செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து இறக்கி அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி குடியிருப்புவாசிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.