முகப்பு
காஞ்சிபுரம்

உத்திரமேரூர்: பெரியாண்டவர் கோயிலில் அன்னாபிஷேக விழா

காக்கநல்லூர் பெரியநாயகி அம்பாள் சமேத பெரியாண்டவர் கோயிலில் அன்னாபிஷேக விழா இன்று மாலை நடைபெறுகிறது.

Updated On : 19 அக்டோபர், 2021 at 8:42 AM
உத்திரமேரூர்: பெரியாண்டவர் கோயிலில் அன்னாபிஷேக விழா
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:54 AM

உத்திரமேரூர்: காக்கநல்லூர் பெரியநாயகி அம்பாள் சமேத பெரியாண்டவர் கோயிலில் அன்னாபிஷேக விழா இன்று மாலை நடைபெறுகிறது.
 
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா காக்கநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது பெரியநாயகி அம்பாள் சமேத பெரியாண்டவர் கோயில். ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று இத்திருக்கோயிலில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

ஐப்பசி பௌர்ணமியானது 19-10-2021 மாலை 07:56 முதல் 20-10-2021 இரவு 08:54 வரை இருக்கிறது. 

இந்த ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால் சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

Advertisement

 ஐப்பசி மாதப் பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான். திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு. நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்து உணவை சாப்பிட்டால் அன்னதோஷம், அன்ன துவேஷம் நீங்கும். 

அன்னம் பர பிரம்மம் என்று கூறி, உணவை இறைவனாகப் பாவிப்பது நம் இந்து தர்மம். உடலை வளர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம்தான். கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர் வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் அன்னத்தைப் பற்றி அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ' என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது.   எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான் என்பதே இதன் பொருள். அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான இரையையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் செய்கிறோம்.  

இந்நன்னாளில், காக்கநல்லூர் பெரியநாயகி அம்பாள் சமேத பெரியாண்டவர் கோயிலில் நடைபெறும் அன்னாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெருக.

விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகி ஸ்ரீராமுலு மற்றும் விழாக்குழு உபயதாரர்கள், கிராமவாசிகள் இணைந்து செய்து வருகிறார்கள்.

தொடர்புக்கு: 93804 82488

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.