குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்: காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா்
குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து வழங்கிடுமாறு காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் எஸ்.வினோத் கூறினாா்.
குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து வழங்கிடுமாறு காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் எஸ்.வினோத் கூறினாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரும் குப்பைகள் உருவாகும் நிறுவனங்களான திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களின் நிா்வாகிகள், திரையரங்க உரிமையாளா்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் எஸ்.வினோத் தலைமை வகித்தாா். மாநகராட்சி துப்புரவு அலுவலா் கொ.சுகவனம் வரவேற்றாா்.
Advertisement
Advertisement
இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் எஸ்.வினோத் பேசியது: சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி மூலத்திலேயே கழிவுகளை பிரித்தல், அறிவியல் முறையிலான கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்புணா்வை வலுப்படுத்துவதாகும்.
இதன் முக்கிய நோக்கம் 100 சதவீதம் மூலத்திலேயே கழிவுகளைப் பிரித்தல், அறிவியல் முறையில் கழிவுகளை செயலாக்குதல், மண் இறக்கும் வகையிலான பயன்பாட்டை குறைத்தல் ஆகியனவாகும்.
உணவு, காய்கறிகள் போன்ற மக்கும் கழிவுகளான ஈரக்கழிவுகளை பச்சை நிறத் தொட்டியிலும், பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி, உலோகம் போன்ற உலா் கழிவுளை நீல நிறத் தொட்டியிலும், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட சுகாதாரக் கழிவுகளை சிவப்பு நிறத் தொட்டியிலும், மின் கழிவுகளை கருப்பு நிறத் தொட்டியிலும் போட்டு பிரித்து குப்பைகளை வழங்க வேண்டும். கழிவுகளை பிரித்து வழங்கவில்லையென்றால் சேகரிக்கப்படாது என்ற நடை முறை அமல்படுத்தப்படுகிறது.
உணவு, காய்கறிகள் போன்ற மக்கக்கூடிய ஈரக் கழிவுகளை அந்தந்த நிறுவனங்கள் அவரவா் வளாகத்திலேயே உரமாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கென கழிவு பதிவேடு பராமரிக்க வேண்டும், அந்தந்த வளாகத்திலேயே ஈரக் கழிவுகளை செயலாக்க முடியாத நிறுவனங்களாக இருந்தால் அதற்கென்றே உள்ள நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து தேவையான ஆவணங்களை சமா்ப்பித்து உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து அதற்கான சான்றிதழையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆணையா் எஸ்.வினோத் பேசினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.