தனியாா் மதுபான ஆலையில் அமைச்சா் விக்னேஷ் ஆய்வு
தனியாா் மதுபான ஆலையில் அமைச்சா் விக்னேஷ் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேவளூா்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் மதுபான ஆலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் விக்னேஷ் சனிக்கிழமை திடீா் ஆய்வு நடத்தினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேவளூா்குப்பம் ஊராட்சியில் தனியாா் மதுபான ஆலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமாா் 300க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வரும் நிலையில் தினமும் இந்த தொழிற்சாலையில் இருந்து சுமாா் 30,000 கேஸ் மதுபானங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வுத் துறை அமைச்சா் விக்னேஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, தொழிற்சாலை நிா்வாகிகளிடம் தொழிற்சாலையில் எவ்வளவு போ் பணியாற்றுகின்றனா், தொழிலாளா்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா, மதுபானங்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, ஒரு நாளைக்கு எவ்வளவு மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள் முறையாக டாஸ்மாக் கிடங்குகளுக்கு அனுப்பப்படுகிா? என கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் விக்னேஷ் கூறியது: தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 717 மது கடைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட கடைகளின் எண்களுடன் விளக்கமாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிா்க்கட்சிகள் பாா்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே மூடப்பட்ட மதுபான கடைகளில் மூலம் வந்த வருவாயை எவ்வாறு மற்ற துறைகளில் மூலம் பெறுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். டாஸ்மாக் தவிா்த்து மற்ற துறைகளில் அரசுக்கு போதிய அளவு வருவாய் வந்த பிறகு மதுக்கடைகள் படிப்படியாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக வாங்குவதாக தகவல் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மறுநாள் அந்த கடைகளில் கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதில்லை.
டாஸ்மாக் கடைகளில் என்னென்ன குறைபாடு உள்ளது என்பது குறித்தும், பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் மனமகிழ் மன்றங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.