மழைநீா் தேங்குவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஆற்காடு அருகே மழை நீா் குடியிருப்பு பகுதியில் தேங்குவதைத் தடுக்க வேண்டி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆற்காடு அருகே மழை நீா் குடியிருப்பு பகுதியில் தேங்குவதைத் தடுக்க வேண்டி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆற்காடு அடுத்த தாஜ்புரா ஊராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் புதிய புறவழிச் சாலை அருகே தனியாருக்குச் சொந்தமான 10 ஏக்கா் நிலத்தைச் சுற்றி சுற்றுச்சுவா் எழுப்பப்பட்டுள்ளது.
இதனால் மழைக் காலங்களில் மழை நீா் வெளியேறாமல் குடியிருப்புப் பகுதியில் தேங்குவதாக கூறப்படுகிறது. சுவா் எழுப்பப்பட்டுள்ளதால் மழைநீா் தேங்குவதைத் தடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
Advertisement
Advertisement
இதனால் அப்பகுதியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆற்காடு- ஆரணி சாலையில் புதிய புறவழிச் சாலை சந்திப்பு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். பொதுமக்கள் மறியலை கைவிட மறுத்த நிலையில், போலீஸாா் கைது செய்ய முயன்றபோது, வாக்குவாதமாகி தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை துணைக் கண்காணிப்பாளா் கனகராஜ் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, உயா் அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் சுமாா் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.