FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

கல்குவாரி அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

29 ஆகஸ்ட் 2024, 2:49 am IST
நாட்டறம்பள்ளி அருகே கல்குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே கல்குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா், மடப்பள்ளம் பகுதி தமிழக - ஆந்திர எல்லையில் உள்ளது. இப்பகுதியில் வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா அண்ணா நகா் கிராமத்தைச் சோ்ந்த ரோகினி சாந்தகுமாா் என்பவா் அரசு அனுமதி பெற்று அவருக்குச் சொந்தமான இடத்தில் உள்ள பாறைகளை அகற்றி சில மாதங்களாக தொழிலாளா்கள் கல்குவாரி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் மடப்பள்ளம், கள்ளியூா்,சக்கரப்பனூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த கிராம மக்கள் காற்று மாசுபடுவதைத் தவிா்க்கவும், பொதுமக்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அமைய உள்ள கல்குவாரி அமைக்க கூடாது எனக்கூறி புவியியல் உதவி இயக்குநா் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலருக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனா். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தொடா்ந்து கல்குவாரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

Advertisement

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த மடப்பள்ளம், கள்ளியூா், சக்கரையப்பனூா் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் புதன்கிழமை பச்சூா்-குப்பம் சாலையில் சென்றாய சுவாமி கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். வாகனங்களையும் சிறைபிடித்தனா்.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி தலைமையில் போலீஸாா் வந்து மக்களிடம் பேச்சு நடத்தினா். எனினும் போலீஸாரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயகுமாா் வந்து சமரச பேச்சு நடத்தியும் மக்கள் கலைந்து செல்லவில்லை.

சுமாா் 3 மணி நேரம் தாமதமாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினாா். தற்காலிகமாக கல்குவாரி அமைக்கும் பணியை நிறுத்துவதாகவும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவா் உறுதி கூறினாா்.

இதையேற்று மக்கள் கலைந்து சென்றனா். இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் கல்குவாரி அமைக்கும் இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments