சொத்தை ஏமாற்றி பறித்ததாக மகன் மீது தாய் புகார்
தனது மகன் அபகரித்த சொத்தை மீட்டுத் தரக் கோரி ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் மூதாட்டி மனு அளித்துள்ளார்.
தனது மகன் அபகரித்த சொத்தை மீட்டுத் தரக் கோரி ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் மூதாட்டி மனு அளித்துள்ளார்.
மீஞ்சூர் ரமணா நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ண நாயுடுவின் மனைவி ராதாம்மாள் (75). இவர், ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் திங்கள்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தற்போது, மாதவரம் பால்பண்ணை அருகே குடியிருந்து வருகிறேன். எனக்கு காஞ்சனா என்ற மகளும், ரகு என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி நல்ல நிலையில் உள்ளனர்.
எனது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். என்னுடைய தாயார் வீட்டில் கொடுத்த சொத்தை விற்று, எனது கணவர் ரமணாநகரில் குடியிருப்பு கட்டினார். இந்நிலையில், எனது கணவர் உயிரிழந்த பின்னர், எனது பெயரில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான சொத்தை, வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, எனது மகன் ரகு ஏமாற்றிப் பறித்துக் கொண்டார்.
மேலும், நள்ளிரவில் என்னைக் காரில் ஏற்றி வந்து திருவள்ளூர் வீரராகவர் கோயில் முன்பு இறக்கி விட்டுச் சென்று விட்டார். அதைத் தொடர்ந்து, கோயில் முன்பு பிச்சை எடுத்து சாப்பிட்டு வருகிறேன். என் மகன் மீது முதியோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது சொத்தை மீட்டுத் தந்தால், அதை அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விட்டு எனது காலத்தை அங்கேயே கழிக்க விரும்புகிறேன் என ஆட்சியரிடம் அளித்த மனுவில் ராதாம்மாள் தெரிவித்துள்ளார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டுத் தருவதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.