திருத்தணி முருகன் கோயிலில் காணிக்கை தலைமுடி ஏலம்: 4-ஆவது முறையாக ஒத்திவைப்பு
திருத்தணி முருகன் கோயிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை ஏலம் எடுப்பதற்கு, திங்கள்கிழமை யாரும் முன்வராததால், இந்த ஏலம் 4-ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை ஏலம் எடுப்பதற்கு, திங்கள்கிழமை யாரும் முன்வராததால், இந்த ஏலம் 4-ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிக்கின்றனர். மலைக் கோயிலில் உப்பு, மிளகு விற்கும் கடை, வில்வம், மலர்மாலை மற்றும் அர்ச்சனைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் என மொத்தம் 12 கடைகள் உள்ளன. மேலும், பக்தர்கள் தலைமுடியைக் காணிக்கை செலுத்தும் பகுதியும் தனியாக உள்ளது.
இதில், பிரசாதக் கடையும், தலைமுடி விற்பனை உள்ளிட்ட கடைகளும் கோயில் நிர்வாகத்தால் பொது ஏலம் விடப்படுகின்றன. அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஏலம், கோயில் தலைமை அலுவலகத்தில், கடந்த மே மாதம் முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை மூன்று முறை நடத்தப்பட்டது. இதில், ஏழு வகைக் கடைகள் மட்டும் ஏலம் போனது. மீதமுள்ள பிரசாதக் கடை, அர்ச்சனைப் பொருள் விற்பனை, தலைமுடி போன்ற 5 கடைகளை ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், கோயில் தலைமை அலுவலகத்தில், கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி, வேலூர் இணை ஆணையர் அசோக்குமார், திருவள்ளூர் உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில், மேற்கண்ட 5 கடைகளுக்கு
4-ஆவது முறையாக திங்கள்கிழமை ஏலம் விடப்பட்டது. அப்போது, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற ஏலத்தில் தலைமுடி தவிர மற்ற 4 கடைகள் ஏலம் போனது. ஆனால், தலைமுடியை யாரும் ஏலம் கேட்காததால்
4-ஆவது முறையாக ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு, தலைமுடி ரூ.2.02 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அதே தொகையை ஆரம்பக்கட்ட ஏலத் தொகையாக, கோயில் நிர்வாகம் நிர்ணயித்தது. இந்த ஏலத் தொகை அதிகம் என்பதால், ஏலத்தை எடுக்க யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து கோயில் அலுவலர் ஒருவர் கூறும்போது, இந்து அறநிலையத் துறை ஆணையரின் அனுமதியோடு, தேதி அறிவித்து மீண்டும் தலைமுடி ஏலம் நடத்தப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.