புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து கைப்பேசி, பணம் பறிமுதல்
புழல் சிறைக் கைதிகளிடம் இருந்து செல்லிடப்பேசி, பணம் ஆகியவை சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
புழல் சிறைக் கைதிகளிடம் இருந்து செல்லிடப்பேசி, பணம் ஆகியவை சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
புழல் சிறையில், சிறைக் காவலர்கள் சனிக்கிழமை இரவு வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு கைதி கழிவறையில் இருந்து செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து செல்லிடப்பேசி, 3 சிம் கார்டுகள், ஒரு சார்ஜர் ஆகியவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வட மாநிலத்தைச் சேர்ந்த நாதுராம் (35) என்பதும், சென்னை கொளத்தூரில் உள்ள நகைக் கடையில் கொள்ளையில் ஈடுபட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக துணை சிறை அதிகாரி கோதண்டன், புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள நாதுராம் உள்பட 25 கைதிகள் அருகே உள்ள விசாரணைச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது போல், விசாரணைச் சிறையில் உள்ள உயர் பாதுகாப்புப் பகுதி 2-இல் உள்ள ஒரு மரத்துக்கு கீழ் கைதிகள் பணம், செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிறை அதிகாரி உதயகுமார் மற்றும் காவலர்கள் சனிக்கிழமை இரவு அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது 5 செல்லிடப்பேசிகள், 5 சிம் கார்டுகள், 5 பேட்டரிகள், 5 சார்ஜர்கள் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்த ரூ.3,500 ரொக்கம் உள்ளிட்டவற்றை போலீஸார் கண்டெடுத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.