FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குப்பைக் குவியலால் தொற்று நோய் பரவும் அபாயம் : துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

திருவள்ளூர் அருகே மலைபோல் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதால் நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:


திருவள்ளூர் அருகே மலைபோல் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதால் நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, வேறு இடத்திற்கு குப்பைகளை அப்புறப்படுத்துவதோடு, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாள்தோறும் 27 டன் குப்பைகள்: 
திருவள்ளூர் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 26 வார்டுகளிலும் ஒவ்வொரு குடியிருப்புகளில் இருந்தும் நாள்தோறும் 17 டன் மக்கும் குப்பைகளும், 10 டன் மக்காத குப்பைகளும் துப்புரவுப் பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. இதுபோன்று சேகரிக்கப்படும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று எடப்பாளையம்-தலாக்காஞ்சேரி-ஈக்காடு கிராம சாலையோரம் குவித்து வைக்கின்றனர். 
மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரிப்பு: பல பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் இருந்து குப்பைகளை வாங்கும்போதே மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்கி, அவற்றைப் பயனுள்ள உரமாக மாற்றுகின்றனர். 
தற்போதைய நிலையில், இந்த நகராட்சியில் உள்ள 26 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள், உணவு விடுதிகள், திருமண மண்டங்கள், காய்கறிச் சந்தைகளின் குப்பைகள் அனைத்தையும் தரம் பிரிக்கும் வகையில் நுங்கம்பாக்கம் கிராமப் பகுதியில் ரூ.5.94 கோடி மதிப்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் சுற்றுச் சுவர் வசதியுடன் குப்பைத் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தலக்காஞ்சேரியில் இருந்து நுங்கம்பாக்கம் கிராமப் பகுதிக்கு குப்பைகளைக் கொண்டு செல்வதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
தொற்று நோய் பரவும்....: இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலாஜி கூறியது:
ஏற்கெனவே குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி, நகராட்சி பொது மயானம் ஆகியவை உள்ளன. மேலும் இந்தச் சாலையை ஈக்காடு, தலக்காஞ்சேரி ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆகியோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மழைக்காலத்தில் குப்பைகள் சாலையில் மிதப்பதால் இந்த வழியாகச் செல்ல முடியாத நிலை உள்ளது. 
அதோடு, குப்பை பொறுக்குவோர் மின்சாரக் கழிவுகளில் இருந்து தாமிரத்தைப் பிரித்தெடுப்பதற்காக குப்பைகளுக்கு தீ வைத்து விட்டுச் செல்கின்றனர். இதனால் புகை மூட்டத்தால் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் இந்த இடத்தில் இருந்து குப்பைகளை அகற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார். 
குப்பைகளை அகற்ற நடவடிக்கை...: இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தற்போது, நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் திருவள்ளூரை அடுத்த நுங்கம்பாக்கம் கிராமப் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதேசமயம், தலக்காஞ்சேரியில் கொட்டப்பட்ட குப்பைக் குவியலை அகற்றுவதற்கு ஒப்பந்தம் விடப்பட இருக்கிறது. ஒப்பந்தப் பணிகள் முடிந்தவுடன், அங்கிருந்து ஒரு மாதத்திற்குள் குப்பைகள் அனைத்தும் அகற்றப்படும். அதன் பின்னர், தலக்காஞ்சேரி பகுதியில் நகராட்சி நிதியில் இருந்து பொழுதுபோக்கு பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments