காலை உணவில் பல்லி: தூய்மைப் பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்
ஆவடி மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இருந்த நிலையில் அதை சாப்பிட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அவர்களை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
ஆவடி மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இருந்த நிலையில் அதை சாப்பிட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அவர்களை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தகவல் அறிந்து 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் 1,145 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு ஆவடி சின்னம்மன் கோவில் அருகே தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை உணவு தயாரிக்கப்பட்டு அந்தந்த மண்டல அலுவலகத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் உணவு அருந்தும் அறைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து ஆவடி மாநகராட்சி மண்டலம்-3ல் பருத்திப்பட்டு பசுமை பூங்கா 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. அப்போது சாம்பாரில் பல்லி இருந்த சாதத்தை அருந்தியதால் 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதைப் பார்த்த துப்புரவு ஆய்வாளர்கள் தூய்மைப் பணியாளர்களை வாகனத்தின் மூலம் ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். மேலும் அனைத்து மண்டலங்களிலும் உணவு அருந்திய தூய்மைப் பணியாளர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதனை மேற்கொண்டனர். இதில் வசந்தா (50), எமிலி (50), குமார் (40), விஜயலட்சுமி (50) ஆகிய 4 தூய்மைப் பணியாளர்கள் உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
Advertisement
இது குறித்து தகவல் அறிந்து 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர், சட்டப்பேரவை உறுப்பினர் ரா.ரமேஷ் குமார், மேயர் கு.உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், ஆணையர் ரா.சரண்யா மற்றும் ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து வந்து சிகிச்சை பெற்ற தூய்மைப் பணியாளர்களிடம் நலம் விசாரித்தனர்.
தூய்மைப் பணியாளர்கள் கூறியது: கடந்த சில வாரங்களாக தூய்மைப் பணியாளர்களுக்கு தயாரிக்கும் உணவில் கரப்பான் பூச்சி, பல்லி, புழு ஆகியவை இருக்கிறது. மேலும் உணவை சரியாக வேக வைக்காமல் தரமன்ற முறையில் தயாரிக்கப்படுகிறது. இது குறித்து பலமுறை மாநகராட்சி சுகாதார துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர். இது குறித்து ஆவடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா கூறியது, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவில் பல்லி இருந்ததாக தகவல் வந்ததையடுத்து, உடனடியாக மற்றவர்களுக்கு உணவு அளிப்பதை நிறுத்தினோம். மேலும் உடனடியாக பாதிக்கப்பட்ட அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு வரவழைத்து பார்த்த போது அதில் 3 பெண்கள் உட்பட 4 தூய்மை பணியாளர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பார்த்து நலன் விசாரித்தோம்.
அவர்களுக்கு வாந்தி, தலை சுற்றல் இருப்பதாக கூறியதன் பேரில் தீவிர கண்காணிப்பில் வைக்கும் படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினோம்.
உணவு உண்ட அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை மூலம் 21 இடங்களில் வழங்கப்பட்ட உணவு மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்திள்ளோம். மாநகராட்சி அங்கீகரிக்கப்பட்ட உணவு தயாரிக்கும் நிறுவனத்தின் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தவறுகள் கண்டறிந்தால், அந்த நிறுவனத்தின் போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.