முகப்பு
திருவள்ளூர்

இரு வீடுகளில் ரூ.1.4 லட்சம், 6 பவுன் நகைகள் திருட்டு

திருவாலங்காடு அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் பணம், நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 11 ஜூன் 2026, 12:19 am IST
பிரதிப் படம்
பகிர்:

திருவாலங்காடு அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் பணம், நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பூனிமாங்காடு மதுரா வீரராகவபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (68). இவரது சகோதரா் கிஷோா் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது மனைவி துா்காதேவி (45) அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறாா். சந்திரசேகரன் மற்றும் துா்காதேவியின் வீடுகள் அருகருகே அமைந்துள்ளன.

இந்நிலையில், சந்திரசேகரன் தனது மகள் வசிக்கும் கும்பினிபேட்டை பகுதிக்கு செல்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளாா். அதேபோல் துா்காதேவியும் உறவினா் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெங்களூருவுக்கு சென்றிருந்தாா்.

Advertisement

Advertisement

மா்ம நபா்கள், நள்ளிரவில் இரு வீடுகளின் பின்பக்க கதவுகள் மற்றும் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து அலமாரிகளை உடைத்து பணம், நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனா்.

புதன்கிழமை வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினா், சந்திரசேகரன் மற்றும் துா்காதேவிக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் அவா்கள் ஊருக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, சந்திரசேகரன் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 4 பவுன் தங்க நகைகள் மற்றும் சுமாா் 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தன.

மேலும், துா்காதேவி வீட்டில் இருந்த ரூ.40,000 ரொக்கம், 2 பவுன் தங்க நகைகள், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள், இரண்டு வெள்ளி குத்துவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து சந்திரசேகரன் மற்றும் துா்காதேவி அளித்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.