முகப்பு
திருவள்ளூர்

பலத்த காற்று, மழை எதிரொலி: திருத்தணியில் 15 மின்கம்பங்கள் சேதம்

திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.

Updated On : 27 மே 2026, 12:38 am IST
திருத்தணி  ரெட்டிக்குளம்  பகுதியில்  பலத்த  காற்றால்  மரம்  விழுந்து சேதமடைந்த மின்கம்பிகள்.
பகிர்:

திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.

திருத்தணி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 3 நாள்களாக கடும் வெயில் வீசியது. பகல் நேரத்தில் 105 டிகிரி வரை வெப்பம் பதிவாகியதால் பொதுமக்கள், முதியோா் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை முதல் மாலை 4.30 மணி வரை வழக்கம்போல் வெயில் நீடித்த நிலையில், திடீரென வானிலை மாறி பலத்த காற்றுடன் மழை பெய்தது.

Advertisement

Advertisement

மழை மற்றும் சூறைக்காற்றின் தாக்கத்தால் திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி பகுதியில் 7 மின்கம்பங்கள் மற்றும் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்தன. அதேபோல் சூரியநகா் இருளா் காலனியில் 3 மின்கம்பங்கள் மற்றும் ஒரு மரம் சேதமடைந்தது. மேலும், தெக்களூா் ஏரிக்கரையோரத்தில் 3 மின்கம்பங்கள் சாய்ந்ததால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தகவலறிந்த திருத்தணி மின்வாரிய இளநிலை பொறியாளா் ஷா்மிளா தலைமையிலான மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று சேதங்களை ஆய்வு செய்தனா். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மாற்று வழிகளில் மின்சாரம் வழங்கும் பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனா்.

இதுகுறித்து திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் முருகபூபதி கூறியதாவது, பலத்த காற்றுடன் பெய்த மழையால் திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மொத்தம் 15 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

மேலும் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் சில மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. புதன்கிழமை சேதமடைந்த கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

பலத்த காற்று மற்றும் மழையால் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்த சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.