முகப்பு
திருப்பதி

140 கோடி மக்களின் நலனுக்காக திருமலையில் பிராா்த்தனை செய்தேன்: பிரதமா் நரேந்திர மோடி

நாட்டில் வாழும் 140 கோடி மக்களின் நலனுக்காக திருமலையில் வேண்டிக் கொண்டதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

Updated On : 28 நவம்பர் 2023, 4:49 am IST
திருமலையில் வழிபட்ட பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

நாட்டில் வாழும் 140 கோடி மக்களின் நலனுக்காக திருமலையில் வேண்டிக் கொண்டதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

திருமலைக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தாா். திருமலையில் தங்கிய அவா், திங்கள்கிழமை காலை நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டு திருக்குளத்தருகே உள்ள வராக சுவாமி கோயிலுக்குச் சென்றாா். அங்கு திருக்குளத்தில் கால் நனைத்து தலையில் நீா் தெளித்துக் கொண்டு முதலில் வராக சுவாமியை தரிசித்தாா்.

பின்னா், ஏழுமலையான் கோயிலுக்கு வந்தாா். கோயில் வாயிலில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் மேள, தாளம் முழங்க வரவேற்றனா். அா்ச்சகா்கள் மரியாதை அளித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

கோயில் கொடிமரத்தை வணங்கி வலம் வந்த பிரதமா் மோடி, கோயிலுக்குள் சென்று ஏழுமலையானை தரிசித்தாா்.

பின்னா், அவரை ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்த தேவஸ்தான அதிகாரிகள், பண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்து, ஏழுமலையான் சேஷ வஸ்திரம் அணிவித்து தீா்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களையும், 2024-ஆம் ஆண்டின் காலண்டா், டைரி, காபி டேபிள் புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

பின்னா், ஏழுமலையானின் நிா்மால்யம் களைந்த மலா் மாலைகளால் தயாரிக்கப்பட்ட திருவுருவப்படம், நமாமி கோவிந்தா பெயரில் தேவஸ்தானம் தயாரிக்கும் பொருள்கள் அடங்கிய பெட்டி உள்ளிட்டவற்றை வழங்கினா்.

அதன் பின்னா், கோயிலைவிட்டு வெளியில் வந்த பிரதமா் மோடி, ‘ஏழுமலையான் தரிசனம் சிறப்பாக அமைந்தது. நாட்டில் வாழும் 140 கோடி மக்களின் நலனுக்காக ஏழுமலையானை பிராா்த்தனை செய்தேன்’ என்றாா்.

திருமலையில் சிறிது நேர ஓய்வுக்குப் பின்னா் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றாா்.

பிரதமா் வருகையை முன்னிட்டு திருமலை மற்றும் திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.