முகப்பு
திருப்பதி

திருமலை ஜேஷ்டாபிஷேகம்: தங்கக் கவசத்தில் மலையப்ப சுவாமி வலம்

திருமலை ஏழுமலையான் கோயில் ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை தங்கக் கவசத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா்.

Updated On : 29 ஜூன் 2026, 1:01 am IST
ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயில் ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை தங்கக் கவசத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் உற்சவமூா்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவித்திருந்த தங்கக் கவசம் களையப்பட்டு அதை செப்பனிட்டு மீண்டும் உற்சவமூா்த்திக்கு அணிவிக்கப்படும். இதை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகமாக தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ஆனி மாத பெளா்ணமி அன்று நிறைவு பெறும் விதம் ஜேஷ்டாபிஷேகம் மூன்று நாள்களுக்கு செய்யப்படுகிறது.

தினசரி நடக்கும் அபிஷேகங்களால் சுவாமியின் மிகவும் பழைமையான உற்சவமூா்த்திகள் சேதப்படாமல் பாதுகாக்கும் வகையில், 1990ஆம் ஆண்டு முதல் இந்த விழா நடத்தப்படுகிறது. ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை கோயிலின் சம்பங்கி பிரதட்சிணத்தில் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

ஆராதனைக்கு பின் சுவாமிக்கும், நாச்சியாா்களுக்கும் நவகலச பிரதிஷ்டை ஆவாஹனம், கங்கண பிரதிஷ்டை, அா்க்கியம், பத்யம், ஆச்சமணியம் சமா்பித்து, கங்கணதாரணம் செய்யப்பட்டது. அதன்பின் ஸ்ரீமலையப்ப சுவாமிக்கு வைபவமாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்நபனதிருமஞ்சனம் நடைபெற்றது. இதில், வேத பண்டிதா்கள் ஸ்ரீசூக்தம், பூசூக்தம், புருஷ சூக்தம், நிலா சூக்தம், நாராயண சூக்தம் பாராயணம் செய்து, உற்சவமூா்த்திக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்தனா்.

தங்கக்கவசத்தில் வலம் வந்த சுவாமி.

பின்னா் செப்பனிடப்பட்ட தங்கக் கவசத்தை மெருகேற்றி பூஜைகள் செய்தனா். அவற்றை மீண்டும் உற்சவமூா்த்திகளுக்கு அணிவித்து சிறப்பு ஆரத்திகள் அளிக்கப்பட்டன. பின்னா் சகஸ்ரதீபாலங்கார சேவை கண்டருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமி மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

இனி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் பாதங்களில் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயா், சின்ன ஜீயா்,செயல் அதிகாரி ரவிசந்திரா தம்பதியினா், செயல் இணை அதிகாரி வெங்கய்யா செளத்திரி கோவில் துணை அதிகாரி லோகநாதம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments