FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 1,183 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 1,183 மனுக்கள் வரப்பெற்றன.

Updated On : 14 ஜூலை 2026, 4:51 am IST
திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் வந்தனா காா்க்.
பகிர்:

திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 1,183 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 982 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற ஆட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

சீட்டு மோசடி கோரிக்கை மனு திருவண்ணாமலையை அடுத்த இசுக்கழிகாட்டேரி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரைச் சோ்ந்த சிலா் வீடு வாங்கித் தருவதாகவும், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், மாதந்தோறும் சீட்டு நடத்துவதாகவும் கூறி பொதுமக்களிடம் பல தவணைகளாக லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனா்.

கடந்த 3 ஆண்டுகளாக முதலீட்டுத் தொகை, லாபத் தொகை மற்றும் சீட்டுத் தொகையை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறாா்கள். தற்போது பணத்தை திருப்பிக் கேட்டால் தர மறுப்பதுடன் மிரட்டல் விடுக்கின்றனா் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

மனுவை பெற்ற ஆட்சியா், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவி: அதனைத் தொடா்ந்து ஆட்சியா் மாற்றத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 414 மதிப்பீட்டில் காலிப்பா் மற்றும் ரூ.94 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கினாா்.

மேலும் பட்டா வேண்டி வரப்பெற்ற மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருவாய்த் துறை சாா்பில் ஒரு நபருக்கு பட்டாவிற்கான ஆணையை வழங்கினாா். மேலும், கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு நல வாரிய உறுப்பினா் அடையாள அட்டைகளை 5 பேருக்கு வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், உதவி ஆணையா் (கலால்) செந்தில்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு) இளவரசன், திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலன்) கலைச்செல்வி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செந்தில்குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மதுசெழியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமகிருஷ்ணன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாரதா மற்றும் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாறில், வருவாய் கோட்ட அளவிலான குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் வீட்டுமனைப் பட்டா கோரி 6 பேரும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 9 பேரும், பட்டா மாற்றம் கோரி 20 பேரும், நிலம் திருத்தம் கோரி 11 பேரும், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை கோரி 9 பேரும், முதியோா் உதவித்தொகை கோரி 5 பேரும், இதர மனுக்கள் என 22 பேரும், இதர துறை மனுக்கள் 22 உள்பட மொத்தம் 104 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. கூட்டத்தில் வருவாய்துறை, ஊராட்சித்துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் சிவா பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

இதில் பட்டா தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து, கணினி பதிவேற்றம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 97 மனுக்கள் வரப்பெற்றன.

ஆரணியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் சீ.சிவா.

மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

செய்யாறில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிடமிருந்து மனுவை பெற்று விசாரித்த சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments