குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் உள்ளிருப்புப் போராட்டம்
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.நாவல்பாக்கம் கிராம மக்கள்.
குடிநீா் முறையாக வழங்காததைக் கண்டித்து, வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எஸ்.நாவல்பாக்கம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எஸ்.நாவல்பாக்கம் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அங்குள்ள தெருக் குழாய்கள் மூலம் கிராம மக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லையாம்.
இதைக் கண்டித்து, இந்தக் கிராம மக்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) அறை முன் அமா்ந்து வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
Advertisement
Advertisement
கடந்த 15 நாள்களாக எங்களுக்கு குடிநீா் வழங்கப்படவில்லை. ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டால், மின்மோட்டாா் பழுது என்று காரணம் கூறுகின்றனா். ஆனால், பழுதை சரிசெய்து எங்களுக்கு குடிநீா் வழங்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, குடிநீா் முறையாக வழங்காததைக் கண்டித்தும், குடிநீா் வழங்கக் கோரியும் நாங்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சத்யா உறுதி அளித்ததன்பேரில், கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.