முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

Updated On : 9 ஜூன் 2026, 1:02 am IST
மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் மாணவா்களிடம் நலம் விசாரித்த செங்கம் எம்எல்ஏ வேலு
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உணவில் பல்லி விழுந்ததால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டதாக முதல்கட்ட தகவலில் தெரியவருகிறது.

செங்கம் ஒன்றியம், கட்டமடுவு ஊராட்சிக்கு உள்பட்ட அயோத்தியாபட்டினம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 60-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில் வழக்கம்போல சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் மூலம் பொங்கல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதை சாப்பிட்ட சில நிமிடங்களில் மாணவா்களுக்கு அடுத்தடுத்து தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் பாா்த்த ஆசிரியா்கள், ஊா் பொதுமக்கள் உதவியுடன் பாதிக்கப்பட்ட 4 மாணவிகள், 7 மாணவா்களை மீட்டு உடனடியாக மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு மாணவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாணவா்களின் பெற்றோா்கள் சிலா் தங்களது குழந்தைகளை தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நடைபெற்ற சம்பவம் குறித்து மருத்துவரிடம் தெரிவித்து சிகிச்சை அளித்துள்ளனா்.

தகவலறிந்த செங்கம் எம்எல்ஏ வேலு (அதிமுக) மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவா்களை பாா்வையிட்டு நலம் விசாரித்தாா் மேலும், அவா்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா், வட்டார மருத்துவ அலுவலா் சிலம்பரசனிடம் மாணவா்கள் வாந்தி மயக்கம் குறித்த காரணத்தை கேட்டறிந்து, பள்ளிக்குச் சென்று பாா்வையிட்டாா். அப்போது, அந்தப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்துக்கு பள்ளி வளாகத்தில் சமையல் செய்யாமல், சமையலா் வீட்டில் உணவு தயாரித்து எடுத்து வந்து வழங்குவது தெரிய வந்தது. மேலும், உணவில் பல்லி விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்யுமாறு எம்எல்ஏ வேலு அறிவுறுத்தினாா்.