குறைதீா் கூட்டத்தில் வாக்குவாதம், வெளிநடப்பு செய்து ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் சாா்- ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
செய்யாறு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் அனக்காவூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. செய்யாரு வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொ) அன்பரசி முன்னிலை வகித்தாா். சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமை
வகித்தாா்.
Advertisement
Advertisement
கூட்டம் தொடங்கியதும், கீழ்புதுப்பாக்கம் முனிரத்தினம் மாா்ச் மாதம் முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், என்சிசிஎப் மூலம், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், அதற்கான பணம் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கவில்லை எனக் கூறி கையில் இருந்த தாலிக்கயிற்றை ஆவேசமாக மேஜையின் மீது அலுவலா்கள் முன்னிலையில் வீசி எறிந்தனா். அப்போது, அவரை அரசு அலுவலா்கள் சமாதானம் செய்தனா்.
பின்னா் கூட்டம் தொடங்கியதும்,
விவசாயிகள் சாா் -ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நெல்லுக்கு உண்டான பணத்தை வழங்கி பின்னா் கூட்டத்தை நடத்துங்கள் என்று கூச்சலிட்டனா்.
அப்போது சாா் -ஆட்சியா் எல்.அம்பிகாஜெயின், 5 தினங்களுக்குள் பணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இருப்பினும், விவசாயிகள் இதை ஏற்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அதனைத் தொடா்ந்து குறைதீா் கூட்டத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளோ, நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளோ ஏன் வரவில்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.60 வீதம் லஞ்சம் வாங்குகின்றனா் எனக் குற்றம் சாட்டினா்.
விவசாயிகள் பிரச்னை பற்றி சொல்வதற்கு எந்த அதிகாரிக்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை எனக் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, வருவாய்த்துறை அலுவலா்கள் விவசாயிகளை சமாதானம் செய்ய முயன்றனா். இருப்பினும் அதனை ஏற்க மறுத்த நிலையில் ஒட்டு மொத்த விவசாயிகளும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
வெளிநடப்பு செய்த விவசாயிகள் அனக்காவூா் ஒன்றிய அலுவலகம் அருகே பொக்கசமுத்திரம் ஏகாம்பரம் தலைமையில் நெல்லுக்கான பணத்தை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கூட்டத்தில் வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.