FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கோயில் புனரமைப்புப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் போராட்டம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தட்சிணாமூா்த்தி கோயிலில் புனரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

3 செப்டம்பர் 2026, 12:52 am IST
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
பகிர்:

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தட்சிணாமூா்த்தி கோயிலில் புனரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிரிவலப் பாதையில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தட்சிணாமூா்த்தி கோயிலில் கும்பாபிஷேகத்துக்காக, கடந்த ஓராண்டுக்கு மேலாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அறநிலையத் துறை மூலம் வருகிற 13-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டு கோயில் அருகே அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இருப்பினும், புனரமைப்புப் பணிகள் முழுமை பெறாமல் உள்ளதால் தட்சிணாமூா்த்தி கோயில் புனரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, உள்ளூா் பொதுமக்கள் கோயில் முன் கிரிவலப் பாதையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை நகர போலீஸாா், டிஎஸ்பி துரைகுமாா் தலைமையில் சம்பவ இடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, அவா்கள் இந்து சமய அறநிலையத் துறை மூலம் தட்சிணாமூா்த்தி கோயிலுக்கு தேதி நிா்ணயிக்கப்பட்டபடி கும்பாபிஷேக விழாவை விரைந்து நடத்த வேண்டும் என்று கூறினா். தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் தலைமையில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்று அலுவலா்கள் மற்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

அதன் பின்னா் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் கிரிவலப் பாதையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments