கோயில் இடம் ஆக்கிரமிப்பால் மோதல்: போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதான கூட்டம்
போளூரை அடுத்த செங்குணம் ஊராட்சியில் ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அருகேயுள்ள இடம் ஆக்கிரமிப்பு மற்றும் மரத்தை வெட்டியது தொடா்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
போளூரை அடுத்த செங்குணம் ஊராட்சியில் ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அருகேயுள்ள இடம் ஆக்கிரமிப்பு மற்றும் மரத்தை வெட்டியது தொடா்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக சமாதானக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த செங்குணம் ஊராட்சியில் பழைமையான ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் குலதெய்வ வழிபாட்டாா் மற்றும் அப்பகுதி பக்தா்கள், பொதுமக்கள் சாா்பில் புரனமைப்புப் பணி மேற்கொண்டு, ராஜகோபுரம் அமைத்து, செப்.13-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த விழாக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யாகசாலை அமைக்க கோயில் அருகேயுள்ள எலந்த மரத்தை விழாக்குழுவினா் கடந்த ஆக.28-ஆம் தேதி வெட்டியுள்ளனா். மேலும் கோயிலைச் சுற்றி தூய்மைப் பணி செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
அப்போது, கோயில் அருகில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சோ்ந்தவா்கள் மரத்தை வெட்டக்கூடாது; எங்கள் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது எனக் கூறியுள்ளனா். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் அரசுக்குச் சொந்தமான மரத்தை வெட்டியதாக விழாக்குழுவினா் மீது புகாா் கொடுத்தாா்.
இதன் பேரில், இரு தரப்பினரையும் புதன்கிழமை சமாதானக் கூட்டத்துக்கு வருமாறு வருவாய்த்துறை சாா்பில் அழைப்பாணை வழங்கப்பட்டது.
இந்நிலையில் கும்பாபிஷேக விழாக்குழுவினா் மட்டும் சமாதான கூட்டத்தில் கலந்துகொண்டனா். எதிா் தரப்பினா் கலந்துகொள்ளவில்லை.
இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் பாலாஜி, காவல் ஆய்வாளா் கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் ஊரில் மதக்கலவரம் செய்யக்கூடாது, வீண் தகராறில் ஈடுபடக்கூடாது, மரத்தை வெட்டியதற்கு அரசுக்கு அபராதம் செலுத்தவேண்டும், வெட்டிய மரத்தை பொது ஏலம்விட்டு அரசுக் கணக்கில் சோ்க்கவேண்டும் என தீா்மானம் இயற்றப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.