FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மாதனூர் ஒன்றிய முறைகேடு: ஓய்வு பெறும் நாளில் அதிகாரி இடைநீக்கம்

மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக மாவட்ட தணிக்கைப் பிரிவு அலுவலகக் கண்காணிப்பாளர் மோகன், செவ்வாய்க்கிழமை

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 5:50 am IST
பகிர்:

மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக மாவட்ட தணிக்கைப் பிரிவு அலுவலகக் கண்காணிப்பாளர் மோகன், செவ்வாய்க்கிழமை ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பிறப்பித்தார்.
மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கும், ஊரக வளர்ச்சித் துறை உயரதிகாரிகளுக்கும் பல்வேறு புகார்கள் சென்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு முதலே அந்த ஊராட்சி ஒன்றியத்தில் பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தனிநபர் கழிப்பறைத் திட்டம் என பல்வேறு திட்டங்களில் பல லட்ச ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஏற்கெனவே, இந்த ஒன்றிய அலுவலகத்தில் ரூ. 40 லட்சம் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அங்கு பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் உள்பட சிலருக்கு 17 பி நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணையில் உள்ளது.  இந்நிலையில், தற்போது வரப்பெற்ற புகாரை அடுத்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். 
இந்த ஆய்வின்போது, மாவட்ட தணிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் மோகன், மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றியபோது எழுந்த பல்வேறு முறைகேடு புகார்கள் தொடர்பாக 16-க்கும் மேற்பட்ட தணிக்கை ஆட்சேபனைகளுக்கு உரிய பதில் அளிக்காமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வு பெறும் நிலையில் இருந்தார். ஆட்சியரின் திடீர் ஆய்வை அடுத்து மோகன் ஓய்வு பெறும் நாளிலேயே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பிறப்பித்துள்ளார்.
மேலும், இந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக கைப்பற்ற ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், முறைகேடுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 17 பி நோட்டீஸ் அளிக்கப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படலாம் என மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments