ஆசிரியையை இடம் மாற்றத் தடை கோரி பெற்றோர், மாணவர்கள் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர் பகவான் இடம் மாற்றத்தைத் தடை செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், இதேபோல்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர் பகவான் இடம் மாற்றத்தைத் தடை செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், இதேபோல் மற்றொரு போராட்டம் அரக்கோணத்தை அடுத்த சேந்தமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் அருகே நெமிலி ஊராட்சி ஒன்றியம் சேந்தமங்கலம் கிராமத்தில், அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, கடந்த 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தவர் ஆசிரியை விஜயா. தமிழாசிரியையான இவர், தமிழ் பாடம் மட்டுமல்லாமல், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பாக பொருளாதார பாடத்தையும் கற்பித்து வந்தாராம்.
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் கலந்தாய்வின் போது ஆசிரியை விஜயா குடியாத்தம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு இடம் மாற்றப்பட்டு கடந்த 10 நாள்களுக்கு முன் அங்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் ஆசிரியை விஜயா விடுப்பில் இருப்பதாக நினைத்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை தான் அவர் மாறுதல் பெற்று வேறு பள்ளிக்குச் சென்றுள்ளது தெரியவந்ததாம்.
இதையடுத்து இப்பள்ளியில் படிக்கும் சேந்தமங்கலம், பின்னாவரம், ஆட்டுபாக்கம், ஆலப்பாக்கம், சித்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களது பெற்றோர்களுடன் இணைந்து வியாழக்கிழமை பள்ளிக்கு பூட்டுபோட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியை விஜயா மீண்டும் சேந்தமங்கலம் பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பள்ளித் தலைமைஆசிரியை உமாமகேஸ்வரி, பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்பட்வில்லை. நெமிலி காவல் ஆய்வாளர் மகாலிங்கம் அங்கு சென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, மாணவர்களை இதுபோன்ற பிரச்னைகளுக்காக முன்னிருத்தி போராட்டம் நடத்துவது தவறு.
ஆசிரியை மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்றால் என்னிடம் நேரில் வந்து பேசியிருக்கலாம். ஆசிரியர்கள் இடமாறுதல் என்பது ஆசிரியர் நலன் மட்டுமல்ல, மாணவர் நலனுக்காகவும் தான். இருந்தாலும் இக்கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் பேசினார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.