பாலாற்றுப் பகுதியில் அதிகரிக்கும் மணல் கடத்தல்!
காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாற்றுப்படுகை, பிள்ளையார் பாளையம் வேகவதி ஆற்றுப் படுகைகளில் இரவு நேரங்களில் அப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக புகார்
காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாற்றுப்படுகை, பிள்ளையார் பாளையம் வேகவதி ஆற்றுப் படுகைகளில் இரவு நேரங்களில் அப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியது: பாலாறு, வேகவதி ஆற்றுப் படுகைகளில் ஏற்கெனவே மணல் அள்ளப்பட்டு ஆங்காங்கே பள்ளங்களாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், பாலாற்றுப் பாலத்தின் கான்கிரீட் தூண்களுக்கு கீழே உள்ள மணலை மர்ம நபர்கள் சிமெண்ட் மூட்டை பைகளில் சேகரித்து, மூட்டை மூட்டைகளாக இரு சக்கர வாகனம், மினி லாரிகள், மாட்டு வண்டி உள்ளிட்ட வாகனங்களில் கடத்தி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே மாவட்டம் முழுவதும் மணல் கடத்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மணல் தட்டுப்பாடு உள்ளதால், இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் நாள்தோறும் கடத்தப்பட்டு வருகிறது. அதுபோல், ஓரிக்கை, வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் மணல் கடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி மணல் கடத்தலுக்கு எதிராக தனிப்படை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
எனினும், மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. கடத்திச் செல்லப்படும் மணல் மூட்டையானது சுமார் ரூ. 300 வரை விற்கப்படுகிறது. கடத்தலுக்கு ஈடுபடுத்தப்படுவோர் பணத்துக்கு ஆசைப்பட்டு இச்செயலுக்கு உள்படுத்தப்படுகின்றனர்.
ஆனால், இவர்களை வைத்து மணல் கடத்தல்காரர்கள் லட்சக்கணக்கில் லாபம் அடைகின்றனர். மேலும் பாலாற்றின் குறுக்கே கடந்த 2011-ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் தூண்களின் கீழே அடியில் உள்ள கான்கிரீட் தெரியும் அளவுக்கு மணல் திருடப்பட்டுள்ளது. அதுபோல், பிள்ளையார் பாளையம் வேகவதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மின் கம்பங்கள் அந்தரத்தில் தொங்கும் அளவுக்கு மணல் திருடப்பட்டுள்ளது. இதனால், கான்கிரீட் கட்டுமானங்கள் பலவீனமாகியுள்ளது.
எனவே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணல் கொள்ளைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.