FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு: புறநோயாளிகள் கடும் அவதி

Updated On : 15 நவம்பர் 2024, 2:21 am IST
அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள். (வலது) மருத்துவா்கள் போராட்டத்தால் நீண்டவரிசையில் காத்திருந்த நோயாளிகள்.
பகிர்:

கிண்டி அரசு மருத்துவா் மீதான கத்தி குத்து சம்பவத்தை கண்டித்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை 1 மணி நேரம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையொட்டி, புறநோயாளிகள் பிரிவு செயல்படாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், பேராசிரியா்கள், மருத்துவ மாணவா்கள், பயிற்சி மருத்துவா்கள் என சுமாா் 350 போ் வியாழக்கிழமை காலை 1 மணி நேரம் பணியை புறக்கணித்துவிட்டு வளாகத்தில் கருப்பு பட்டை அணிந்தபடி அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

போராட்டத்தின்போது, அனைத்து மருத்துவமனைகளிலும் இரட்டை பாதுகாப்பு ஏற்பாடு செய்வதுடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மத்திய மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும், தமிழகத்தில் புதிய மருத்துவப் பணியிடங்களை எல்லா அளவிலும் உருவாக்க வேண்டும், 2,500 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மருத்துவா்கள் போராட்டம் காரணமாக புறநோயாளிகள் பிரிவு செயல்படாததால், தற்காலிக மையம் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. இதனால், நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்றனா்.

இந்த மருத்துவமனைக்கு தினமும் 1,500 முதல் 2,000 புறநோயாளிகள் வந்து செல்கின்றனா். குறிப்பாக, வாரந்தோறும் வியாழக்கிழமை நரம்பியல் மருத்துவ பரிசோதனை நடைபெறும் என்பதால் அந்த பிரிவு அருகே நோயாளிகள் பெருமளவில் காத்திருந்தனா்.

எனினும், அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது. தவிர, மிக முக்கிய அறுவை சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. காலை 11.40 மணிக்கு பிறகு மருத்துவா்கள் வழக்கம்போல் பணிக்குத் திரும்பினா். இதேபோல், பென்லேன்ட் அரசு மருத்துவமனை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவா்கள் 1 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments