மரம் நடுவதாகக் கூறி ரூ. 32.8 லட்சம் விரயம்: கணியூர் ஊராட்சி மீது மக்கள் புகார்
சூலூர் அருகே ரூ. 32.8 லட்சம் செலவு செய்து நடப்பட்ட மரக்கன்றுகளில் ஒன்றுகூட வளரவில்லை. இதையடுத்து கணியூர் ஊராட்சி
சூலூர் அருகே ரூ. 32.8 லட்சம் செலவு செய்து நடப்பட்ட மரக்கன்றுகளில் ஒன்றுகூட வளரவில்லை. இதையடுத்து கணியூர் ஊராட்சி நிர்வாகம் அரசுப் பணத்தை விரயம் செய்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டம், கணியூரில் 2015, 2016 ஆம் ஆண்டுகளில் மரம் வளர்ப்புக்காக ரூ. 32.8 லட்சம் செலவிடப்பட்டதாக இரு இடங்களில் தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது.
ஊஞ்சப்பாளையத்திலிருந்து கொள்ளுப்பாளையம் வரை சுமார் 1.8 கி.மீ. தொலைவுக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலும், புதுப்பாளையத்திலிருந்து தண்ணீர்பந்தல் வரை 2.8 கி.மீ. தொலைவுக்கு ரூ. 12.8 லட்சம் மதிப்பிலும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆனால் மரங்கள் அப்பகுதிகளில் வளரவில்லை.
மரம் நடவுக்கு ரூ. 32.8 லட்சம் செலவானதாக அறிவிப்புப் பலகையில் விளம்பரப்படுத்தியதால், அப்பகுதியினரும் சமூக ஆர்வலர்களும் கவலை அடைந்துள்ளனர். இதன்மூலம் அரசுப் பணம் பல லட்சம் ரூபாய் வீணாகியுள்ளதாகவும், ஒரு மரம்கூட வளரவில்லை எனவும் அவர்கள் புகார் கூறினர்.
இதுகுறித்து கணியூர் ஊராட்சி செயலாளர் லியோவிடம் கேட்டபோது, மரம் நடவுக்கான பணம் முழுவதும் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
மரக்கன்றுகளைப் பராமரிக்க மாவட்ட நிர்வாகமும், சூலூர் ஊராட்சி ஒன்றியமும் நிதி ஒதுக்கவில்லை என்றும், மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்ற நிதி இல்லாததால், அவை கருகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் வரிப் பணம் இவ்வாறு வீணானதைக் கண்ட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பெரும் வேதனை அடைந்துள்ளனர். இதில் ஊழல் நடைபெற்றதா என அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.