FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஈஷா யோக மையத்தில் சுதந்திர தின விழா

கோவை ஈஷா யோக மையத்தில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கோவை ஈஷா யோக மையத்தில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆதியோகி சிலைக்குச் செல்லும் நுழைவு வாயிலான மலைவாசல் எதிரில் நடைபெற்ற விழாவுக்கு ஓய்வு பெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளர் பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில், ஈஷா தன்னார்வலர்கள், ஆசிரமவாசிகள், சுற்றுப்புற கிராம மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், சத்குரு ஜக்கி வாசுதேவின் சுதந்திர தின செய்தி வாசிக்கப்பட்டது. 
அதில், கடந்த 72 ஆண்டுகளில் குறிப்பிடும்படியான பல விஷயங்கள் செய்யப்பட்டிருந்தாலும், நம் தேசத்தில் இன்னும் பல விஷயங்களை நாம் சரி செய்ய வேண்டியுள்ளது.
நம்முடைய விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் வியத்தகு பணிகளை செய்துள்ளன. 
வணிக நிறுவனங்கள் அற்புதமான விஷயங்களைச் சாதித்துள்ளன, நம் கல்விமுறைகள் வளர்ந்திருக்கின்றன, கட்டமைப்புகள் வளர்ந்திருக்கின்றன. இருப்பினும் நாம் வரும் பத்தாண்டுகளில் மிக முக்கிய 3 விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஜாதி, மத பாகுபாடு, ஊழல், பயங்கரவாத அச்சுறுத்தல் இந்த மூன்றையும் இயன்ற வகையில் களைய ஒன்றாகச் செயல்பட வேண்டும். அதேபோல், அடிப்படை ஊட்டச்சத்து கூட இல்லாமல் தவிக்கும் 40 கோடி துர்பாக்கியசாலி மக்களின் வாழ்க்கை நிலையை மாற்ற உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மாவட்ட மைய நூலகத்தில்:
கோவை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு மாவட்ட மைய நூலகர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மூன்றாம் நிலை நூலகர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். இரண்டாம் நிலை நூலகர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். இதில், நூலகப் பணியாளர்கள், வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 கோவைப்புதூரில்...
கோவைப்புதூர் மகாலட்சுமி நகர் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் சங்கத் தலைவர் கே.எம்.சந்திரசேகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் வெ.சுப்பிரமணியன், சுந்தர், சங்கரநாராயணன், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.தனலட்சுமி ஆகியோர் உரையாற்றினர்.
சங்க நிர்வாகிகள் செந்தாமரை, சுதாகர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments