கோவையில் நவம்பர் 30 இல் மேற்கு மலை சூழலியல் திருவிழா
கோவையில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் மேற்கு மலை சூழலியல் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று
கோவையில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் மேற்கு மலை சூழலியல் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று மேற்கு தொடர்ச்சித் மலைப் பாதுகாப்பு இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரையில் 3 நாள்கள் சூழலியல் திருவிழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓசை காளிதாஸ், ஜனார்த்தனன், மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு இயக்கத்தின் முன்னோடிகள் பாண்டுரங்க ஹெக்டே, கிளாட் ஆல்வாரஸ், கலானந்த் மணி ஆகியோர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேற்குத் தொடர்ச்சி மலைகளானது தமிழகம், கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களின் உயிர் நாடியாக உள்ளது.
ஆனால் இன்றைய நிலையில் வனப் பகுதிகள் குறைந்து வருவதால் குடிநீர் பிரச்னை ஏற்படுவதுடன், விலங்குகளின் வாழ்வாதரமும் கேள்விக்குறியாகி வருகிறது.
இந்த மலைகளில் 4,500 வகை தாவரங்களில் 1,700 வகை உலகில் வேறு எங்கும் இல்லை. அதேபோல, உலகில் அதிக எண்ணிக்கையில் புலிகளும், ஆசிய யானைகளும் இங்குதான் வாழ்கின்றன.
இத்தகைய சிறப்புமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஆனால், தற்போது இந்த மலைகளைப் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது.
ஆகவே, இந்த சூழலியல் திருவிழாவை தேசிய மாநாடு போல் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த விழாவில் பங்கேற்க மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ள 6 மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஆகியோரை அழைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், இதில் சூழலியல் ஆர்வலர்கள், பழங்குடியினர், விவசாய அமைப்பினர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள், அரசுத் துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.