FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாடகை நிலுவை: கடை முன்பு குப்பைத் தொட்டியை வைத்த மாநகராட்சி அதிகாரிகள்

வாடகை நிலுவை வழங்காததால் கடை எதிரில் குப்பைத் தொட்டியை வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

வாடகை நிலுவை வழங்காததால் கடை எதிரில் குப்பைத் தொட்டியை வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி பகுதியில் நடப்பு நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை போன்ற நிலுவைத் தொகைகளை வசூலிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன்படி, நிலுவை இருக்கும் கடைகள், வீடுகளின் முன்பு குப்பைத் தொட்டிகளை வைத்தல், கடைகளுக்கு சீல் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, மேற்கு மண்டலத்துக்குள்பட்ட பெரிய கடை வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஷியாம் என்பவர் வெள்ளிப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார். இந்த நிலையில், இந்த கடைக்கு வாடகை நிலுவைத் தொகை ரூ.9 லட்சம் வழங்கவில்லை என்று கூறி, குப்பைகளுடன் கூடிய குப்பைத் தொட்டியை செவ்வாய்க்கிழமை கடை எதிரில் அதிகாரிகள் வைத்துச் சென்றனர்.
அதேபோல், இதே பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் இலைக் கடை வைத்து நடத்தி வரும் இருவரும் தலா ரூ.8 லட்சம் வரை வாடகை செலுத்தவில்லை என்று கூறி அந்த கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள வெள்ளிப் பொருள் விற்பனையகத்தின் உரிமையாளர் ஷியாம், தனது கடைக்கு வரும் டிசம்பர் மாதம் வரையிலுமான வாடகையை முன் கூட்டியே செலுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, எனது கடை வாடகை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அதில் நான் வெற்றி பெற்றுள்ளேன். எனது கடைக்கு ஆயிரம் ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகபட்சம் 20 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று மாநகராட்சி சட்டம் உள்ளது.
ஆனால், சட்ட விரோதமாக கடை வாடகையை ரூ.5,500 ஆக உயர்த்தி அறிவித்து, நிலுவைத் தொகையை கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். விதிகளுக்குப் புறம்பாக நான் நடந்து கொள்வதாக மாநகராட்சி கருதினால், சட்டப்படி எனது கடைக்கு சீல் வைத்திருக்க வேண்டும். ஆனால் எந்த சட்டத்திலும் இல்லாதவாறு, சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கடை எதிரில் குப்பைத் தொட்டியை வைத்துள்ளனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments