FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மு.க.ஸ்டாலின் கைதைக் கண்டித்து சாலை மறியல்: திமுகவினர் 118 பேர் கைது

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட 118 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 25 மே 2018, 4:30 am IST
பகிர்:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட 118 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வரிடம் பேச அனுமதி கேட்டு வழங்கவில்லை எனக் கூறி தலைமை செயலகத்தில் போராட்டம் நடத்திய எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வட கோவை பவர் ஹவுஸ் அருகே திமுக மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், பகுதிச் செயலாளர்கள் வி.பி.செல்வராஜ், வே.நா.உதயக்குமார், விவசாய அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம் உள்பட 45 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பைந்தமிழ்பாரி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வடக்கு மாவட்டப் பொருளாளர் நாச்சிமுத்து, இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் முருகவேல் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை, பீளமேடு ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் 39 ஆவது வார்டு செயலாளர் முருகேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 13 பேரையும், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் கவுன்சிலரும், பகுதிச் செயலாளருமான எஸ்.எம்.சாமி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 35 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதே போல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சியில்...
பொள்ளாச்சி-கோவை சாலையில் மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக மாவட்ட செயலாளர் தமிழ்மணி தலைமையிலான 37 பேரை போலீஸார் கைது செய்தனர். பொள்ளாச்சி காந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட நகரச் செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையிலான 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையத்தில்...
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற வடக்கு மாவட்ட செயலர் சி.ஆர்.ராமச்சந்திரன், சிறுமுகை நகர செயலர் உதயகுமார், காரமடை மேற்கு ஒன்றிய செயலர் சுரேந்திரன் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். காரமடை கார் நிறுத்த மைதானத்தில் திமுக நகர செயலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், நிர்வாகிகள் அருணாசலம், ராயப்பன், பழனிசாமி, கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 98 பேரை கைது செய்த போலீஸார்அனைவரையும் தனியார் மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments