குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனை: அமைச்சர், டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனை நடத்தியுள்ள நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி உள்ளிட்ட காவல் துறையினரை உடனடியாக
குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனை நடத்தியுள்ள நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி உள்ளிட்ட காவல் துறையினரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி கோவை மத்திய சிறையில் அவர் இழுத்த செக்குக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தின் காவல் துறைத் தலைவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதே போல சில காவல் துறை அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற, குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கே மீண்டும் டிஜிபி பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு பின்னணி என்ன?
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் எத்தனை முறை சோதனை நடத்தப்படும் என்பது தெரியவில்லை. இதன் மூலம் எவ்வளவு ஆதாரங்கள் வெளியாகும் என்பதும் தெரியவில்லை. ஆனால், தமிழக முதல்வர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பது கண்டனத்துக்குரியது.
ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து சிக்கி வரும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும். டிஜிபி ராஜேந்திரனும் பதவி விலக வேண்டும். அதே நேரத்தில் முதல்வர், துணை முதல்வர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால் அவர்களும் ராஜிநாமா செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் பதவி விலக மாட்டார்கள்.
மக்கள் போராட்டங்கள் மூலமே இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்தால் பதவியில் தொடரலாம் என்ற நம்பிக்கையில் ஆளும் கட்சியினர் உள்ளனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க விதிகளை தளர்த்தி உள்ளனர்.
இயற்கை வளங்களைத் தனியார் பெரு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது. கோவை மத்திய சிறையில் வ.உ.சி. இழுத்த செக்கை பொதுமக்களின் பார்வைக்காக பூங்காவில் வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.