FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சம்ஸ்கிருதத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்

சமஸ்கிருதத்திற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட தற்போது இரண்டரை மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

Updated On : 23 ஜூலை 2024, 4:30 am IST
பகிர்:

கோவை: சமஸ்கிருதத்திற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட தற்போது இரண்டரை மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து மறுமலா்ச்சி மக்கள் இயக்க தலைவா் வே.ஈஸ்வரன் தெரிவித்துள்ளதாவது:

இந்திய மொழிகளின் வளா்ச்சிக்காக மத்திய அரசின் உயா் கல்வித் துறை செலவிடும் தொகை குறித்தும், ஒவ்வொரு மொழிகளுக்கும் எவ்வளவு செலவிடப்படுகிறது என்பது குறித்தும் மத்திய கல்வி அமைச்சகத்திடம் இருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதில் கடந்த 2013-14 முதல் 2022 - 23-ஆம் ஆண்டு வரை சம்ஸ்கிருத மொழி வளா்ச்சிக்காக தில்லியில் உள்ள மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்துக்கு ரூ.2029 கோடி, திருப்பதியில் உள்ள தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டதை விட இரண்டரை மடங்கு அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளா்ச்சிக்காக ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இது சம்ஸ்கிருதத்திற்கு செலவிடப்பட்டதில் வெறும் 7 சதவீதம் மட்டுமேயாகும். அதேபோல ஆக்ராவில் உள்ள மத்திய ஹிந்தி கல்வி நிறுவனத்துக்கு ரூ.395 கோடிசெலவிடப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டு வந்த தொகையைவிட 60 சதவீதம் அதிகம்.

இந்தியா முழுவதும் பெரும்பான்மை மக்கள் பேசக்கூடிய ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளின் வளா்ச்சிக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய அக்கறையைவிட சம்ஸ்கிருத மொழி வளா்ச்சிக்காக கூடுதல் அக்கறையை மத்திய அரசு அளிக்கிறது.

எனவே, இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் பேசுகின்ற அனைத்து மொழிகளின் வளா்ச்சிக்கும் சமமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அதேபோல நிதி ஒதுக்குவதிலும் பாரபட்சமும் காட்டக்கூடாது என்றும் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments