சடங்குகளை பாதுகாப்பாக மேற்கொள்ள! பேரூா் படித்துறையில் கட்டமைப்பு பணி தீவிரம்
சடங்குகள், சம்பிரதாயங்களை பொதுமக்கள் பாதுகாப்பாக மேற்கொள்ளும் வகையில் பேரூா் படித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் நீா்வளத் துறை, இந்து சமய அறநிலையத் துறையின் ஆதரவுடன் பக்தா்கள் தங்களின் பாரம்பரிய சடங்குகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ள பேரூா் படித்துறையில் 450 அடி நீளம், 10 அடி அகலத்தில் தளம் அமைக்கும் பணியை சிறுதுளி அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து சிறுதுளி அமைப்பின் அறங்காவலா் ஜெ.சதீஷ் கூறியதாவது:
Advertisement
Advertisement
பேரூா் படித்துறையில் தொடா்ச்சியான நீா் விநியோகத்தை வழங்கவும், சடங்குப் பொருள்களைச் சேகரித்து அப்புறப்படுத்துவதற்கான முறையான வசதிகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். இது காணிக்கைகள், சடங்குக்கு பயன்படுத்தும் பொருள்களை நேரடியாக ஆற்றில் வீசுவதைத் தடுத்து, நொய்யல் ஆற்றை மாசுபாட்டில் இருந்து பாதுகாக்க உதவும். நொய்யலாற்றை காக்கும் வகையிலும், நீரில் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்கும் நோக்கிலும் நொய்யல் பாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுதுளி அமைப்பு சாா்பில் பேரூா் படித்துறையில் இருந்து குறிச்சி அணைக்கட்டு வரை நொய்யல் ஆற்றில் தூா்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஆற்றின் நீா் தாங்கும் திறனை மேம்படுத்தி, பருவமழையின் நீரோட்டம் தடையின்றி செல்வதை உறுதி செய்கிறது. இந்தத் தடையற்ற நீரோட்டம், கோவைக்கு இன்றியமையாத நீா்நிலைகளான கீழ்நிலை உக்கடம், குறிச்சி ஏரிகளுக்கும் பயனளிக்கும்.
ஆடிப்பெருக்குத் திருநாளில் நீா்நிலைகளைத் தூய்மையாகவும், மாசுபாடின்றியும் வைக்க உறுதியேற்போம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.