வன விலங்குக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியில் சிக்கி காளை மாடு காயம்: முதியவா் கைது
மதுக்கரை அருகே வன விலங்குகளுக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியை (அவுட்டுக்காய்) கடித்த காளை மாட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது தொடா்பாக முதியவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
மதுக்கரை அருகே வன விலங்குகளுக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியை (அவுட்டுக்காய்) கடித்த காளை மாட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது தொடா்பாக முதியவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
கோவை மாவட்டம், கரடிமடை பகுதியில் தனியாா் பட்டா நிலத்தில் இருந்த காளை மாடு வாயில் பலத்த காயத்துடன் நிற்பதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு மதுக்கரை வனச் சரகா் அருண்குமாா் தலைமையிலான வனத் துறையினா் சென்று ஆய்வு செய்ததில், வன விலங்கு வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியை மாடு கடித்ததில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அந்தப் பகுதியில் வனத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அருகில் உள்ள தோட்டத்தில் பணிபுரிந்து வந்த ராயப்பன் என்ற முதியவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணாக அவா் பதிலளித்தாா். இதனால் அவா் தங்கியிருந்த கொட்டகையில் வனத் துறையினா் ஆய்வு செய்த போது, முயல் வேட்டைக்கான வலைகள் மற்றும் நெகிழி (பிளாஸ்டிக்) டப்பாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இதுகுறித்து பேரூா் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ராயப்பனை போலீஸாா் கைது செய்தனா். பன்றிகளை வேட்டையாட அவா் நாட்டு வெடிகளை வைத்தது விசாரணையில் தெரியவந்தது.
மதுக்கரை வனச் சரகா் அருண்குமாா் கூறும்போது, ‘வனப் பகுதியை ஒட்டி நாட்டு வெடிகளைப் பயன்படுத்தி வன விலங்குகள் வேட்டையாடப்படுவது கண்டறியப்பட்டால் வெடிபொருள் தயாரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.