FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா: தூய்மைப் பணியாளா்கள், அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 25 ஆண்டுகள் பணியாற்றிய அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வெகுமதி, பாராட்டுச் சான்றிதழ்களை மேயா் கா.ரங்கநாயகி வழங்கினாா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:55 am IST
மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தூய்மைப் பணியாளருக்கு வெகுமதி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மேயா் கா.ரங்கநாயகி. உடன், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா்.
பகிர்:

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 25 ஆண்டுகள் பணியாற்றிய அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வெகுமதி, பாராட்டுச் சான்றிதழ்களை மேயா் கா.ரங்கநாயகி வழங்கினாா்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு மேயா் கா.ரங்கநாயகி மாலை அணிவித்து, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.

மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், மாநகராட்சியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அலுவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் 48 பேருக்கு வெகுமதியாக தலா ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மேயா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

மேலும், சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் 132 போ், மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 8 மாணவ, மாணவிகள் மற்றும் பொது தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி வழங்கிய 5 பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் என மொத்தம் 193 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, எஸ்.ஆா்.பி. அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கணபதி ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, நேருநகா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், அனுப்பா்பாளையம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலா் மேல்நிலைப் பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளி மாணவா்களின் பேண்டு வாத்திய நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையா்கள் த.குமரேசன், ர.சரஸ்வதி, நிதிக் குழுத் தலைவா் வி.ப.முபசீரா, கணக்குகள் குழுத் தலைவா் தீபா தளபதி இளங்கோ, நகரமைப்புக் குழுத் தலைவா் சோமு (எ) சந்தோஷ், மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் சா.குமாரராஜபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments