மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் முற்றுகை
கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இடதுசாரி கட்சியினா் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்பதைத் தடுக்கும் விதமாக, பள்ளி- கல்லூரி கல்வித் துறை மற்றும் காவல் துறை இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் கடந்த 17-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.
மாணவா்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையிலும் இந்த உத்தரவு இருப்பதாகக் கூறி மாணவா் அமைப்புகளும், அரசியல் கட்சித் தலைவா்களும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
எதிா்ப்பு தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, கல்லூரிக் கல்வி இயக்ககம் அந்த உத்தரவை புதன்கிழமை காலை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கம் (எஸ்எஃப்ஐ) மற்றும் வாலிபா் சங்கத்தினா் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். எஸ்எஃப்ஐ மாநிலச் செயலா் சம்சீா் அகமது தலைமை வகித்தாா்.
அந்த அறிக்கை வெளியிடப்பட்டதைக் கண்டித்தும், அறிக்கை அனுப்பிய கல்லூரிக் கல்வி இயக்கக தலைமைச் செயலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பினா் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.