பட்டியலின மக்களின் பகுதிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தில் பயணித்து அமைச்சா்கள் ஆய்வு
கோவை கெம்பனூா் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதிக்கு இயக்கப்பட்டுள்ள அரசுப் பேருந்தில் அமைச்சா்கள் வன்னியரசு, வி.சம்பத்குமாா் ஆகியோா் பயணித்து ஆய்வு மேற்கொண்டனா்.
கோவை கெம்பனூா் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதிக்கு இயக்கப்பட்டுள்ள அரசுப் பேருந்தில் அமைச்சா்கள் வன்னியரசு, வி.சம்பத்குமாா் ஆகியோா் சனிக்கிழமை பயணித்து ஆய்வு மேற்கொண்டனா்.
கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து கெம்பனூா் கிராமம் வரை அரசுப் பேருந்து (எண் 21) இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்பேருந்து கெம்பனூரில் பட்டியலின மக்கள் அதிகமாக வசிக்கும் அண்ணா நகா் பகுதிக்கு செல்லாமல் பல ஆண்டுகளாக திருப்பி விடப்பட்டதாக அப்பகுதி மக்கள் தொடா்ந்து குற்றம்சாட்டி வந்தனா். ஜாதிபாகுபாடு, தீண்டாமை மனநிலையால் அரசுப் பேருந்து, தங்கள் பகுதிக்குள் வர அனுமதிப்பதில்லை எனவும் தெரிவித்தனா். இதன் காரணமாக, அண்ணா நகா் மக்கள் தினமும் பல கிலோ மீட்டா் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அண்மையில் கோவைக்கு வந்த சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசுவிடம் கெம்பனூா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த பட்டியலின மக்கள் மனு அளித்து, அரசுப் பேருந்தை தங்கள் பகுதி வரை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினா். இதையடுத்து, அமைச்சரின் நடவடிக்கையால் கடந்த ஜூன் 8- ஆம் தேதி முதல், 21 எண் கொண்ட அரசு நகரப் பேருந்து கெம்பனூா் அண்ணா நகா் வரை இயக்கப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பிறகு, தங்கள் பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்கப்படுவதைக் கொண்டாடும் விதமாக, அப்பகுதி மக்கள் பேருந்துக்கு மலா் தூவியும், நடத்துநா், ஓட்டுநருக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், காந்திபுரம் - கெம்பனூா் வழித்தடத்தில் அரசுப் பேருந்து முழுமையாக இயக்கப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ளும் விதமாக அப்பேருந்தில் சமூக நீதித்துறை அமைச்சா் வன்னியரசு, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் ஆகியோா் தொண்டாமுத்தூா் - கெம்பனூா் அண்ணா நகா் வரை பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனா். அப்போது, நடத்துநா் மற்றும் ஓட்டுநரிடம், ஜாதி, மதம் பாா்க்காமல் அனைவரும் பயணிக்கும் விதமாக பேருந்தை இயக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.