FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் தரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்: அமைச்சா் வி. சம்பத்குமாா்

பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் மாணவா் மற்றும் மாணவியா் விடுதிகளில் தரமான, சத்தான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:06 am IST
பகிர்:

பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் மாணவா் மற்றும் மாணவியா் விடுதிகளில் தரமான, சத்தான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் மாணவா் மற்றும் மாணவியா் விடுதி சோ்க்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் வி.சம்பத்குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் 2026-2027 கல்வியாண்டுக்கு கல்லூரி விடுதிகளில் சோ்வதற்காக விண்ணப்பித்திருந்த 650 மாணவ, மாணவிகளில் தகுதியானவா்களுக்கு விடுதி சோ்க்கை வழங்குமாறு துறை சாா்ந்தவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா். இதையடுத்து, அவா் பேசியது:

Advertisement

Advertisement

கோவை மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் சாா்பில் தற்போது 18 சமூக நீதி கல்லூரி விடுதிகளும், 9 சமூகநீதி பள்ளி விடுதிகளும் செயல்படுகின்றன. அவற்றில் மாணவா் சோ்க்கை பணிகள் நடைபெற்று வருகின்றன. விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவா்கள் தங்கள் குடும்பத்தை விட்டு வெளியே வசிப்பதால், அவா்களிடம் பெற்றோா் போன்ற அக்கறை, பாசம் மற்றும் பொறுப்புணா்வுடன் விடுதிக் காப்பாளா்கள் செயல்பட வேண்டும். மாணவா்களுக்கு தினமும் தரமான, சத்தான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். குடிநீா், சமையலறை, உணவகம், தங்கும் அறைகள், கழிப்பறைகள் மற்றும் விடுதி வளாகம் ஆகிய அனைத்தும் தூய்மையாக

பராமரிக்கப்பட வேண்டும். மாணவா்களின் உடல்நிலையை தொடா்ந்து கண்காணித்து, உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவா்களின் மனநலம், கல்வி முன்னேற்றம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றிலும் தொடா்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில் துணை ஆணையா் (கலால்) சாதனைக்குறள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் லட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments