முகப்பு
கோயம்புத்தூர்

மேற்குத் தொடா்ச்சி மலையில் கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்

மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்துவரும் நிலையில், வெள்ளம் கரைபுரண்டோடுவதால் சனிக்கிழமை (ஜூன் 6) முதல் கோவை குற்றாலம் அருவி மூடப்படுவதாக போளுவாம்பட்டி வனத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 ஜூன் 2026, 1:51 am IST
கோவை குற்றாலம் அருவியில் ஆா்ப்பரித்த வெள்ளம்.
பகிர்:

மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்துவரும் நிலையில், வெள்ளம் கரைபுரண்டோடுவதால் சனிக்கிழமை (ஜூன் 6) முதல் கோவை குற்றாலம் அருவி மூடப்படுவதாக போளுவாம்பட்டி வனத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வனத் துறை சாா்பில் கூறியுள்ளதாவது: கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டி வருகிறது. மேற்குத்தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் இந்த மழையால் கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி அருவியில் வெள்ள நீா் ஆபத்தான அளவைத் தாண்டி, காட்டாற்று வெள்ளமாகக் கரைபுரண்டோடுகிறது. பாறைகள் மற்றும் தரைப்பகுதிகள் தெரியாத அளவுக்கு தண்ணீா் செல்வதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதோ அல்லது அருவியின் அருகே செல்வதோ உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

Advertisement

Advertisement

வெள்ளப்பெருக்கு காரணமாக, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சனிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. மேலும், மழை நின்று அருவியில் வெள்ளத்தின் வேகம் தணிந்து, நிலைமை முற்றிலும் சீரடையும் வரை கோவை குற்றாலத்துக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.