முகப்பு
கோயம்புத்தூர்

கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: கோவையைச் சோ்ந்த இருவா் கைது

திருப்பூரில் ரேஷன் அரிசி கடத்திய இருவா் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 20 மே 2026, 2:03 am IST
ரேஷன் அரிசியுடன் கைதுசெய்யப்பட்ட இருவா்
பகிர்:

திருப்பூரில் ரேஷன் அரிசி கடத்திய இருவா் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பல்லடம் - திருப்பூா் சாலையில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் ராஜசேகரன், உதவி ஆய்வாளா் அன்சாரி ஹூசைன் மற்றும் போலீஸாா் திருப்பூா் ராயா்பாளையம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது 5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து சரக்கு வாகனத்தில் இருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் கோவை, குனியமுத்தூரை சோ்ந்த ரஹமத்துல்லா மகன் பைசல் (35), வாகன ஓட்டுநரான கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் திருஞானமூா்த்தி (46) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இவா்கள் கோவை ராமநாதபுரம், சவுரிபாளையம், ஒண்டிபுதூா், புலியகுளம், மீனா எஸ்டேட் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி திருப்பூரில் உள்ள அரிசி ஆலை மூலமாக வடமாநிலத்தவா்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பைசல், திருஞானமூா்த்தி ஆகிய இருவரையும் கைதுசெய்து, 5 டன் ரேஷன் அரிசி, சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.