வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக பொய் புகார்: காவலாளி கைது
பெருந்துறை அருகே தனியார் நிறுவனத்தில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாரிடம் பொய்யாகப் புகார் கூறிய அந்தத் தொழிற்சாலையின் காவலாளி கைது செய்யப்பட்டார்.
பெருந்துறை அருகே தனியார் நிறுவனத்தில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாரிடம் பொய்யாகப் புகார் கூறிய அந்தத் தொழிற்சாலையின் காவலாளி கைது செய்யப்பட்டார்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், நாவிதன் தோட்டத்தில் தனியார் பைப் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் காவலாளியாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்தவர் ஜெகதீஷ் (39). இவரது சொந்த ஊர் கரூரை அடுத்த அருகம்பாளையம்.
காவலாளி ஜெகதீஷ் தனியார் நிறுவன ஊழியர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இதனால், அவரை இனி வேலைக்கு வர வேண்டாம் என்று நிறுவனத்தினர் கூறிவிட்டார்களாம். அவர் வேலைக்கு வராமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தாராம்.
இந்நிலையில், ஜெகதீஷ் தனது செல்லிடப்பேசியில் 100 எண்ணுக்கு அழைத்து தான் வேலை பார்த்த தனியார் நிறுவனத்தின் பெயரைக் கூறி அங்கு வெடிகுண்டு பதுக்கி வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த அழைப்பு சென்னை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றுள்ளது. உடனே அவர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்தனர். எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குத் தகவல் கூறினர். பெருந்துறை டி.எஸ்.பி. ராஜாகுமார் உத்தரவின்பேரில், பெருந்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக பொய் புகார் அளித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவலாளி ஜெகதீஷை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.