ஈரோடு படைப்பாளர்களை கௌரவிக்கும் வகையில் படைப்பரங்கம்
ஈரோடு புத்தகத் திருவிழாவில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் சொந்த மாவட்டப் படைப்பாளர்களை கௌரவிக்கும் வகையில் "ஈரோடு படைப்பாளர்கள் படைப்பரங்கம்' அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் சொந்த மாவட்டப் படைப்பாளர்களை கௌரவிக்கும் வகையில் "ஈரோடு படைப்பாளர்கள் படைப்பரங்கம்' அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் உலகம், தேசியம், பிற மாநிலம் என பல்வேறு படைப்பாளர்களின் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி பெயர்ப்பு நூல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் இரண்டாவது ஆண்டாக ஈரோடு மாவட்டப் படைப்பாளர்களை கௌரவிக்கும் வகையில் "ஈரோடு மாவட்டப் படைப்பாளர்கள் படைப்பரங்கம்' அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரங்கில் ஈரோடு மாவட்டப் படைப்பாளிகளின் நூல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இங்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 60 படைப்பாளர்களின் நூல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஈரோடு மாவட்டத்தில் வாழ்ந்து மறைந்த மு.ச.சிவம், சு.மா.சண்முகசுந்தரம், இரா.வடிவேலன், பெ.தூரன், சி.முத்துசாமி, சீனி.தேவராஜன், மழைமகன், மருத்துவர் மே.செ.ராசமாணிக்கம், பழனியப்பன் ஆகியோரது புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, அவர்களது நூல்களை குடும்பத்தாரிடம் பெற்று விற்பனைக்காக வைத்துள்ளனர். மேலும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற படைப்பாளிகளான மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் எழுதிய "மனிதனுக்கு மரணமில்லை', எழுத்தாளர் நச்சுண்ணை எழுதிய சிறுகதை தொகுப்பு, வா.மு.கோமு, சு.தங்கவேலு, ஈரோடு அறிவுக்கன்பன், செ.ராசு எழுதிய "தமிழ் கல்வெட்டுப் பாடல்கள்', "கொங்கு நாட்டுப்புற இசைக் கருவிகள்' போன்ற வரலாற்று நூல்கள், கே.நிர்மலாதேவி எழுதிய "பிரபஞ்சனின் சமூகம்', ஈரோடு தமிழன்பனின் சகோதரர் சென்னிமலை தண்டபாணி எழுதிய "உன் கண்களும், என் கவிதைகளும்', ஈரோடு கதிரின் பெயரிடப்படாத புத்தகம் உள்ளிட்ட பல்வேறு படைப்பாளிகளின் நூல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.