பண்ணாரி அம்மன் கோயிலில் மறுபூஜை விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மறுபூஜை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மறுபூஜை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா மார்ச் 19-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. 27-ஆம் தேதி நடைபெற்ற கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியில் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா ஏப்ரல் 3-ஆம் தேதி அதிகாலை நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் இறங்கினர். புதன்கிழமை புஷ்பரதம்,வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு, வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை, தொடர்ந்து தங்கரதம் புறப்பாடு நடைபெற்றது.
குண்டம் விழாவை நிறைவு செய்யும் விதமாக மறுபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. அதிகாலை அம்மனுக்கு தங்கக் கவசம், தங்கக் காப்பு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் துவங்கினர். பக்தர்கள் நிறைமனை சப்பரம் எடுத்தும், அலகு குத்தியும் வேல் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் குண்டத்தில் உப்பை காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர். இரவு பட்டிமன்றம், ஆன்மிகச் சொற்பொழிவு, வில்லிசை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றன.
கோவை, நீலகிரி, ஈரோடு, மேட்டுப்பாளையம், திருப்பூர், சத்தியமங்கலத்தில் இருந்து இந்தக் கோயிலுக்கு 200-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சத்தி துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசாமி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.