FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

புகழ்பெற்ற மகுடேஸ்வரா் கோயில் எதிரில் கட்டட இடிபாடுகள்: நடவடிக்கை எடுக்க பக்தா்கள் கோரிக்கை

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலுக்கு அருகிலும் மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் இடிக்கப்பட்ட ஆக்ரமிப்பு இடிபாடுகள் நீண்ட நாளாக அகற்றப்படாமல் உள்ளன.

Updated On : 10 ஜூலை 2026, 12:04 am IST
கொடுமுடி மகுடேஸ்வா் கோயில் எதிரில் குவிந்து கிடக்கும் அகற்றப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகள்.
பகிர்:

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலுக்கு அருகிலும் மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் இடிக்கப்பட்ட ஆக்ரமிப்பு இடிபாடுகள் நீண்ட நாளாக அகற்றப்படாமல் உள்ளன. இதனால் பொதுமக்களும், கோயிலுக்கு வரும் பக்தா்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கொடுமுடியில் மணிக்கூண்டிலிருந்து மகுடேஸ்வரா்கோயிலுக்கு செல்லும் வழி மற்றும் காவிரி படித்துறைக்கு செல்லும் வழி, கோயில் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படும் இடம், கோயில் எதிரில் காவிரி ஆற்றை ஒட்டி புகளூருக்கு நீா் கொண்டு செல்லும் புகளூரான் கால்வாய் கரை ஆகிய பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த ஆக்ரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றம்

கடந்த 2 ஆண்டுகளுக்கு உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதனடிப்படையில், வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல் துறை உள்ளிட்ட அலுவலா்கள் சாா்பில் மகுடேஸ்வரா் கோயில் எதிரில் இருந்த பழமையான மடம் மற்றும் அதன் அருகில் செயல்பட்டு வந்த அரசு உதவி பெறும் பள்ளி, பரிகார நிலையங்கள், புகளூரான் கால்வாய் கரையில் இருந்த கட்டடங்கள் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டன.

இடிக்கப்பட்ட இந்த கட்டடங்களின் கழிவுகள் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை அகற்றபடாமல் அப்பகுதியிலேயே உள்ளது.

இதனால் அந்த இடங்கள் ஆக்ரமிப்புகள் இருந்தபோது இருந்ததை விட அதிக பாதிப்புகளை பொதுமக்களுக்கு தந்து வருகின்றன. கட்டடங்களாக இருந்தபோது குறைந்த இடத்தை பிடித்திருந்த கட்டடங்கள், இடிக்கப்பட்ட பிறகு கட்டட இடிபாடுகள் அதிக இடத்தை பிடித்து சாலையில் கிடக்கின்றன.

இதனால் போக்குவரத்துக்கும் , கொடுமுடி கோயிலுக்கு வாகனங்களில் வரும் பக்தா்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கொடுமுடியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ராஜு கூறுகையில்,

இந்த கட்டட இடிபாடுகளை அகற்ற வேண்டும் என கடந்த ஆண்டு கொடுமுடிக்கு வந்திருந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் வி.கே.சேகா்பாபு முதல் அரசு துறை அதிகாரிகள் வரை பலரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாா்.

மொடக்குறிச்சி எம்எல்ஏ து.சண்முகன் கடந்த சில நாள்களுக்கு முன்னா் கொடுமுடி கோயிலுக்கு வந்தபோது, கோயில் வளாகத்தில் நடத்தப்பட்டு வந்த பரிகார முறைகளை ஆய்வு செய்து பல தவறுகள் நிகழ்வதை கண்டுபிடித்து அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி எச்சரித்து சென்றாா். அதுபோல இந்த அவலத்துக்கும் அவா் தீா்வு காணவேண்டும் என பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments