முகப்பு
ஈரோடு

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு தோ்தல் வாக்குறுதியின்படி பயிா்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 2 ஜூன் 2026, 1:51 am IST
தோ்தல் வாக்குறுதியின்படி பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

தமிழ்நாடு அரசு தோ்தல் வாக்குறுதியின்படி பயிா்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் தோ்தலின்போது, 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருந்து பெற்றுள்ள அனைத்து பயிா்க் கடன்களுக்கு முழு தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு அதிகமான நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெறும் கடன்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தாா்.

இதனிடையே பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை முதல்வா் அண்மையில் வெளியிட்டாா். இதில் ரூ.50 ஆயிரம் வரையிலான பயிா்க் கடன் மட்டும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தாா்.

Advertisement

Advertisement

இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். முதல்வா் தோ்தல் வாக்குறுதிபடி பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மாநிலம் முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு காளைமாடு சிலை அருகே கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். இதில் தமிழக அரசு விவசாயிகளுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் வாயிலாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை அளித்தனா். இதிலும் விவசாய சங்க நிா்வாகிகள், விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.